Saturday, April 11, 2009

பட்டாளம் - திரைப்பட அனுபவம்

நம்ம அபிமான நடிகை 'நத்தூஸ்' நடித்த படம் என்பதாலும், என் பெண் பரிந்துரைத்ததாலும் நேற்று சத்யம் 'சிக்ஸ் டிகிரீஸ்' திரையரங்கில் 'பட்டாளம்' பார்த்தோம். என் பெண் 'அப்பா! எங்களுக்கெல்லாம் செம ஜோக்காக இருக்கும்! உங்களுக்கு எப்படிப் பிடிக்கும் என்று எனக்குத் தெரியாது' என்று முன் ஜாக்கிரதை செய்து கொண்டார்.

நதியா கிருத்துவ நிறுவனம் நடத்தும் பள்ளியின் 'கரெஸ்பாண்டெண்டாக' வருகிறார். தன் பள்ளியில் ப்ளஸ் 2 படிக்கும் எட்டு இளவட்டங்கள் கூத்தடிக்கும் போதெல்லாம் அவர்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும், தண்டிக்கக் கூடாதென்று சுற்றியிருப்பவர்களுக்கு அறிவுறுத்துகிறார். அவர்களை அடித்துத் திருத்த முயற்சிக்கும் ஒரு ஆசிரியரை கண்டிப்புடன் பணி நீக்கம் செய்கிறார்.


திடீரென்று பார்த்தால் 'நத்தூஸ்' அதே நிறுவனம் நடத்தும் ஒரு மன நோய் காப்பகத்தில் 'ஸ்டெதாஸ்கோப்'புடன் திரிகிறார். அங்கிருக்கும் மருத்துவர்களுடன் நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பது எப்படி என்று விவாதிக்கிறார்!!


நடுவில் ஒரு கன்னிகாஸ்த்ரி ப்ளஸ் 2 படிக்கும் அநாதை மாணவி ஒருவரை நதியாவிடம் ஒப்படைக்க, அவர் நம் எட்டு இளவட்டங்கள் படிக்கும் அதே வகுப்பில் இளம் மாணவியைப் புகுத்துகிறார். படத்தில் காதல், பொறாமை, கொலை வெறி, எல்லாம் உள்ளே வருகிறது. அது வரை படத்தில் வரும் 'ஜோக்குகளை' என் பெண் ரசித்துச் சிரிப்பதை நான் ரசித்துக் கொண்டிருந்தேன்.


நம் எட்டு பேர் குழு தலா நான்கு பேருள்ள இரண்டு குழுக்களாக தம்மை பிரித்துக் கொண்டு ஆரம்பத்திலிருந்தே அடித்துக் கொள்பவர்கள். மற்ற பள்ளிகளுடன் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளின் போது இந்த அடிதடி முற்றிப் போய் பள்ளியின் மானம் கப்பலேறும் நிலை வருகிறது. நதியா பொறுமையை சற்றே இழந்து நம் கதாநாயகர்களைத் திட்டி விட்டுப் போகிறார். அவர்களுக்கு ரோஷம் வந்து விடுகிறது. ஒன்று சேர்ந்து விளையாட்டுப் போட்டியில் முதலிடத்தில் வந்து பள்ளியின் பெருமையைக் காப்பாற்றுகிறார்கள். இந்த இடம் உணர்ச்சிபூர்வமாக படமாக்கப் பட்டிருக்கிறது. நிற்க!


காதலும் அதனால் வரும் பொறாமையும் சூடு பிடிக்கிறது. எட்டுப் பேரில் ஒருவன் இன்னொருவனைப் பழி வாங்கும் நிலைக்குப் போகிறது. ஆனால் இடையில் ஒரு பாவமும் செய்யாத மூன்றாமவன் ஆண்டு நிறைவு விழாவின் போது நிறைவேற்றப் பட்ட சதித் திட்டத்தில் நண்பனை காப்பாற்றப் போய் இறந்து போகிறான். காதலித்தவனுக்கு காதலி எழுதி வைத்த கடிதம் மூலம் உண்மை உரைக்கிறது. பிறகு என்ன நடக்கிறது என்று திரையில் காண்க.


இயக்குனருக்கு கதை சொல்வதில் இருந்த சிக்கலைப் பற்றி படத்தின் நடுவே நாம் யோசிக்கிறோம். கிளைக் கதைகள் கதையோடு பொருந்த சற்றே சிரமப் படுகின்றன. கடைசிப் பாடலைத் தவிர மற்ற பாடல்கள் அவ்வளவாக கருத்தைக் கவரவில்லை. பாராட்ட வேண்டிய சமாச்சாரம் என்னவென்றால், 'டூயட்' பாடலைக் கூட பொறுப்புடன் விரசம் தட்டாமல் எடுத்திருக்கிறார்கள். பள்ளியின் நூறு வயதான மணிக்குக் கீழே அமைக்கப் பட்ட மேடையில் நடக்கும் மாணவர்களின் இசைக் கச்சேரி விறுவிறுப்பாகப் படமாக்கப் பட்டிருக்கிறது. எப்போதும் போல நதியா மிதமில்லாமல் சிறப்பாகச் செய்திருக்கிறார். அவர் நடிக்க வேண்டுமென்றால் சைக்கிள் ஒட்டிக்கொண்டே பாடும் காட்சி ஒன்றாவது வேண்டும் என்று ஒப்பந்தத்தில் எழுதி விடுவார் போலும்!


வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்கள் 'ஜோக்' பார்க்கும் மகிழ்ச்சிக்காகப் படம் பார்க்கலாம். ரொம்ப நாள் ஓடாது.


சத்யம் தியேட்டரில் இனிமேல் பாப்கார்ன் வாங்குவதில்லை என்று வைத்திருக்கிறேன். 'சவக் சவக்' என்று தரமிழந்து போய் கிடக்கிறது. அதை விற்று காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள்

Sunday, March 29, 2009

பங்குச் சந்தையில் பணம் பண்ணுவதா! போங்கப்பா!!

பங்குச் சந்தையில் சரியான சமயத்தில் பங்குகளை வாங்கி விற்கத் தெரிந்தவனுக்குத்தான் அதெல்லாம் முடியும். "ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி"யிருந்து கோட்டை விட்ட கதைகள் ஏராளம். பேராசையும் (Greed) திகிலும் (Fear) ஆட்டிப் படைக்கும் சந்தைக் களம் அது.

இது போன்ற (சராசரி?!) நினைப்புகளை உடைக்கும் வகையில் சமீபத்தில் ஒரு புத்தகம் படித்தேன். அது "மதிப்பு சராசரியாக்கும் முறை" (Value Averaging) என்ற புத்தகம். சல்லிசாக ரூ150 விலையில் ஹிக்கின்பாதம்ஸில் கண்ணில் பட்டது. மைக்கல் ஈ எட்லேசன் (Michel E Edleson) என்பவர் எழுதியிருக்கிறார். ISBN 81-7094-228-4. அவர் இந்தப் புத்தகத்தை அமெரிக்க பங்குச் சந்தையை மையமாக வைத்து எழுதியிருக்கிறார். மேலும் இவர் கூறும் முறையில் பங்குகளில் நேரடியாக வர்த்தகம் (Stock Trading) செய்யாமல் பரஸ்பர நிதிகளை (Mutual Fund) உபயோகிப்பதை அறிவுறுத்துகிறார்.

பங்குச் சந்தையில் காலையில் வாங்கி மாலையில் விற்கும் (ஏறக்குறைய சூதாட்டத்திற்கு ஈடான) தினப்படி வர்த்தக (Daily Trading) முறை கேள்விப் பட்டிருக்கிறோம். நிறுவனங்களின் செயல்பாட்டை ஆராய்ந்து அறிந்து நீண்ட கால முதலீடு செய்யும் அடிப்படை முதலீட்டு (Fundamental Investing) வகை கேள்விப்பட்டிருக்கிறோம். நண்பரோ அல்லது நட்பான தரகரோ துப்புக் கொடுக்க அதை வைத்து பங்கை வாங்கிப் போடுபவர்களைப் பார்த்திருக்கிறோம்.

நம் ஆசிரியர் இதெல்லாம் எதுவுமே தேவையில்லை (!?!) என்கிறார். திட்டமிட்ட முதலீட்டு (Systemmatic Investment) முறைகள் இரண்டை அறிமுகப் படுத்தும் இவர் கொள்கை விதிப் படி முதலீடு (ஃபார்முலா இன்வெஸ்டிங்) செய்ய, முறையே இரண்டு கொள்கை விதிகளை அறிமுகப் படுத்துகிறார்.

அந்த விதிகளில் ஒன்று பங்கு விலையைச் சராசரியாக்கும் (Cost Averaging) விதி. மற்றொன்று பங்கு மதிப்பைச் சராசரியாக்கும் (Value Averaging) விதி.

சுமார் 20 வருடங்களில் பங்குச் சந்தையின் செயல்பாட்டை ஆராய்ந்து அதன் மூலம் தனது விதிகளை ஆதாரத்துடன் நிலை நிறுத்தியிருக்கிறார். விதியை விதியால் (formula) வெல்லும் வழி சொல்லிக் கொடுத்திருக்கிறார்!

எளிமையாக எழுதப் பட்டிருக்கும் ஆர்வத்தைத் தூண்டும் புத்தகம் இது. விதியைப் புரிந்து கொண்டு தற்போது செயல் படுத்திக் கொண்டிருப்பதாலும், விதியை விவரிக்க ஒரு இடுகை போதாது என்ற காரணத்தாலும் அந்த விதியை பின் வரும் ஒரு இடுகையில் (அது இந்தியப் பங்குச் சந்தையிலும் வேலை செய்கிறது என்று எனக்குத் தோன்றினால்) காண்போம்.

Sunday, March 22, 2009

பொருளாதார நிலை பற்றி அருமையான விளக்கம்!

வீட்டுக் கடன்கள் மூழ்கியதால் பொருளாதாரம் எப்படிச் சீர்கெட்டது என்று படிப் படியாகத் தெளிவாக விளக்கும் சித்திரம் கீழே.

The Crisis of Credit Visualized from Jonathan Jarvis on Vimeo.

Friday, March 06, 2009

உலகம் உருண்டை (The World is Curved) புத்தக ஆய்வு


டேவிட் ஸ்மிக் என்ற புகழ் மிக்க பொருளாதார வல்லுனர் 'உலகம் உருண்டை' புத்தகத்தை எழுதியிருக்கிறார். இந்த ஆங்கிலப் புத்தகம் தாமஸ் ஃப்ரீட்மன் எழுதிய 'உலகம் தட்டை' (The World is Flat) என்ற புத்தகத்தைத் தொடர்ந்து எழுதப் பட்டிருக்கிறது. அதைத் தழுவி அல்ல. 'உலகம் தட்டை' உலகமயமாக்கல் பற்றியும் இணையத் தொழில் நுட்பம் தூரம் மற்றும் கலாச்சார வித்தியாசங்கள் ஏற்படுத்தும் தளைகளை உடைத்தெறிந்து செய்திருக்கும் அதிசயம் பற்றி பேசியது. 

டேவிட் ஸ்மிக் தன் புத்தகத்தில் உலகத்தில் நிதி (பணம்) ஆதாரங்கள் இணையத்தால் இணைக்கப் பட்டு ஒரு மாபெரும் கடலைப் போல் இன்று மாறியிருப்பதை எடுத்துக் காட்டுகிறார். இந்த ஆபத்தான மாக்கடலில்தான் இன்றைய அரசாங்கங்கள் தங்கள் பொருளாதாரங்களை வழி நடத்துகின்றன. 
நிதி ஓடைகள் எங்கிருந்து எங்கு பாய்கின்றன, எதனால் அப்படிப் பாய்கின்றன, எப்போது அவற்றின் திசைகள் திரும்புகின்றன என்று தெளிவாகப் புரிந்து கொள்ள உதவும் அமைப்புகள் இந்த நிதி மாக்கடலில் இன்னமும் ஏற்படுத்தப் படவில்லை. 

இந்த சிக்கல்களால் பெரும்பாலான நேரம் குருட்டுத்தனமாகவே பல அரசுகள் கொள்கை அமைத்துச் செயல் படுகின்றன. அதே போல ஒவ்வொரு நாட்டுக்கும் அவர்களின் மக்கட் தொகை விகிதங்களைப் பொறுத்து பொருளாதார வளர்ச்சித் தேவை அமைகிறது. உதாரணமாக சீனா தன் இளைஞர்கள் அனைவருக்கும் வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால் வருடத்திற்கு 10 சதவிகிதம் என்ற அளவில் அவர்கள் பொருளாதாரத்தை இன்னமும் பல வருடங்களுக்கு அவர்கள் வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. அதே நேரத்தில் ஐரோப்பியர்கள் தங்கள் பொருளாதாரத்திற்கு துரித கதியில் வளர்ச்சி தேவையில்லை என்று முடிவு செய்து விட்டார்கள் போலத் தெரிகிறது. 

மேற்கூறிய காரணங்கள் ஏற்படுத்தும் வெளிச்சமின்மையால் இன்றைய நிதிச் சந்தைகள் காற்றுப் போன போக்கில் அலைக்கழிக்கப் படுகின்றன என்று உண்மையைச் சொல்லி பயமுறுத்தியிருக்கிறார் ஆசிரியர். மாலுமியால் சரியான பாதையில் வழிநடத்தப் படாத கப்பல்கள் சூழலில் சிக்கி அழிந்து போவது போன்ற ஆபத்துகள் நிதிக் கடலில் பயணிக்கும் அரசாங்கங்ளைப் பற்றியுள்ளதை இவர் தெளிவு படுத்துகிறார்.

பொருளாதாரத்தில் ஈடுபாடும், யானைப் பொறுமையும் இருந்தால் மட்டுமே இந்தப் புத்தகத்தைப் படிக்க முடியும். பல கலைச் சொற்களையும் பொருளாதாரக் கோட்பாடுகளையும் அள்ளித் தெளித்து எழுதப் பட்டிருக்கும் புத்தகம் இது. உதாரணமாக அரசாங்கம் அல்லது மத்திய வங்கிகள் வட்டித்தொகையை மாற்றுவதால் ஏற்படும் பொருளாதார விளைவுகள் படிப்பவருக்குப் புரியும் என்ற நிலைப்பாட்டுடன் கருத்துகளை அல்லது முடிவுகளை அள்ளி வீசியிருக்கிறார் ஆசிரியர். என்னைப் போன்ற பாமரனுக்குப் புரிவது கடினமாகத்தான் இருந்தது. அதே சமயத்தில் பொறுமைக்கும், முயற்சிக்கும் பரிசு கண்டிப்பாகக் கிடைக்கிறது. 

உலக நிதி மாக்கடலில் உள்ள ஆபத்துகள் மற்றும் சூழல்கள் சிலவற்றை நான் இந்தப் புத்தகம் மூலம் புரிந்து கொண்டேன். உதாரணத்திற்குச் சுவாரசியமான சில கீழே:

  • இன்றைய 'சப் ப்ரைம்' பிரச்சினை கடலில் மூழ்கியிருக்கும் ஒரு மாபெரும் பனி மலையின் கண்ணுக்குத் தெரியும் உச்சியைப் போன்றது
  • முதலீட்டாளர்களில் 'பிரம்ம குரு' என்று உலகால் புகழ்ந்து போற்றப் படும் 'வாரன் பஃப்பெட்' நம் ஆசிரியர் கண்ணோட்டத்தில் தேவையில்லாமல் பீதியைக் கிளப்பி விடும் ஆசாமி (!?!)
  • அமெரிக்காவிற்கு 2 ட்ரில்லியன் டாலர் அளவிற்கு வெளிக் கடன் இருந்த போதிலும் அவர்களின் 57 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை ஒப்பிட்டால் இது கொசு. ஆகவே வெளிக் கடனால் அமெரிக்கா மூழ்கிப் போகப் போவதில்லை
  • அமெரிக்க டாலர் இன்னமும் உலகின் சேமிப்பு நாணயமாக இருக்கிறது. அதனாலேயே டாலரின் தேவை எப்போதும் இருப்பதாலும், சீனா போன்ற நாடுகள் தங்கள் சேமிப்பின் மதிப்பை சடுதியில் இழக்க அனுமதிக்க மாட்டார்கள் என்பதாலும் டாலர் அவ்வளவு சீக்கிரமாகச் சரியாது
  • அமெரிக்கா எண்ணை உற்பத்தி நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து அவர்கள் எண்ணை வாணிபத்தை டாலரில் நடத்த வேண்டும் என்று என்றோ போட்டுக் கொண்ட ஒப்பந்தம் இன்றும் உலக நாடுகள் (குறிப்பாக வளரும் நாடுகள்) எண்ணை வாங்க டாலருக்கு அலையும் நிலையை உருவாக்கி இருப்பதால் டாலருக்கு எப்போதும் தேவை அதிகமாகவே இருக்கிறது. தேவையின் அளவும் ஒரு நாணயத்தின் மேல் மக்கள் வைக்கும் நம்பிக்கையுமே நாணயத்தின் மதிப்பை நிர்ணயிக்கிறது. இரண்டாம் விஷயம் (நம்பிக்கை) குறைந்து கொண்டே வந்தாலும், அமெரிக்கர்க சூத்திரதாரிகள் தந்திரமாக டாலர் நாணயத் தேவையை அதிகரிக்கும் சூட்சுமங்களைச் ஏற்கெனவே செய்து வைத்திருக்கிறார்கள்.
  • ஈரான் போன்ற நாடுகள் எண்ணை வியாபாரம் செய்ய டாலர் கேட்கும் போக்கிலிருந்து மாற ஆரம்பித்து விட்டார்கள். இந்தப் போக்கு அமெரிக்காவிற்கு கவலைக்கிடம்
  • உலகின் ஒரே உற்பத்திக் கூடமாகப் போவதாகக் கனவுடன் இன்று சரக்குகளை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கும் சீனா தன் குமிழி உடைந்தால் இருப்பில் உள்ள சரக்குச் சேமிப்பை 'கிடைத்ததை அள்ளு' என்று காசாக்க முயற்சிக்கும் போது பல பொருளாதாரங்கள் உடைய வாய்ப்பிருக்கிறது
  • சீனாவில் இளைஞர்கள் இருக்கும் அளவிற்கு ஏகக் குறைந்த எண்ணிக்கையில் இளைஞிகள் உள்ளனர். அதே போல் இளைஞர்கள் அனைவருக்கும் கொடுக்க சீனாவில் வேலை இல்லை. வயசுப் பையன்கள் பெண்ணுக்கு அடித்துக் கொள்ளாமல் இருக்கவும் அவர்கள் வேலையில்லாத பிரச்சினையால் கலவரத்தில் இறங்காமல் இருக்கவுமே சீனா ஒரு மாபெரும் ராணுவத்தை நடத்தி வருகிறது. இந்த ராணுவம், அவர்களின் வளமான சில மாநகரங்களுக்கும் வளமில்லாத ஏகப்பட்ட கிராமப் புறங்களுக்கும் இடையே பெரும் செயற்கை அரணாகச் செயல் படுத்தப் படுகிறது.
  • கொடுத்த கடன் வராக் கடனாகப் போனால் இருக்கும் மொத்தக் கடன்களில் வராக் கடன் விகிதத்தைக் உடனே குறைக்க வேண்டுமல்லவா? இதற்கு என்ன வழி? இன்னமும் கொஞ்சம் கடனை உடனைக் கொடுத்து மொத்தக் கடன்களின் அளவை அதிகரித்து விட்டால் வராக் கடன் விகிதம் குறைந்து விடப் போகிறது! சிம்பிள்! இது சீனாவின் 'தனி' வழி!!
  • ஜப்பானிய அரசு சில வருடங்களுக்கு முன் வைப்புகளுக்கான வட்டியை 0 சதவிகிதமாகக் குறைத்தது. அப்போது ஜப்பானிய இல்லத்தரசிகள் அரிசிப் பானைக்குள் பணம் வைப்பதும், ஜப்பானிய வங்கியில் பணம் வைப்பது ஒன்றுதான் என்று புரிந்து போய் நேரடியாக வெளிநாடுகளில் இணையம் மூலம் முதலீடு செய்யத் தொடங்கி விட்டனர். அவர்கள் இன்று கட்டுப் படுத்தும் உலக நிதியின் அளவு சுமார் 11 ட்ரில்லியன் டாலர். தினசரி ஜப்பானிய நிதிச் சந்தைகள் திறந்திருக்கும் நேரத்தில் உலக நிதிப் பரிவர்த்தனைகளில் 20 விழுக்காடு ஜப்பானிய வீடுகளிலிருந்து தொடங்குகின்றன. இவற்றில் பெரும்பாலோர் இல்லத்தரசிகள். மீன் பொரியல் செய்து கொண்டே ஜப்பானியப் பெண்மணி சந்தைகளைக் கட்டுப் படுத்துகிறாள். முக்கால் வாசி நேரம் லட்சக் கணக்கில்  தனி நபர் முடிவுகள் மிகுந்த இந்த செயலமைப்பை எந்த ஒரு மத்திய வங்கியோ அல்லது அரசாங்க அமைப்போ இன்று கட்டுப் படுத்த இயலாது. இவர்கள் கட்டுப் படுத்தும் நிதி அளவோ சக்தி மிகுந்தது. இவர்களில் யார் எப்போது எந்தப் பக்கம் பாய்வார்கள் என்று எந்தக் கொம்பனாலும் கட்டியம் சொல்ல இயலாது

ஆர்வம் மிகுந்தவர்கள் மற்றவை புத்தகத்தில் காண்க.

Sunday, February 08, 2009

தி ப்ரெஸிடெண்ட் இஸ் கமிங் (2009)

இது ஒரு பாலிவுட் படம். ஜனவரியில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தை டாடா ஸ்கை 'ஷோ கேஸ்' இல் பார்க்கலாம். குனால் ராய் கபூர் என்பவர் இயக்கியிருக்கிறார்.

கதை இதுதான். அமெரிக்க (முன்னாள்) அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியா வருகிறார். அவர் ஒரு துடிப்பான இந்திய இளைஞரிடம் கைகுலுக்கிப் பேச வேண்டும். அதற்காக அமெரிக்கத் தூதரகத்தில் ஒரு விளம்பர நிறுவனத்தைப் பணிக்கிறார்கள். அந்த நிறுவனம் நாடு முழுவதும் சலித்து ஆறு இளைஞர்களைத் (நான்கு இளைஞர் மற்றும் இரண்டு இளைஞிகள்) தேர்வு செய்து தூதரகத்திற்குக் கொண்டு வருகிறார்கள். இளைஞர்கள் சிறு வயதிலேயே சாதித்தவர்கள். பங்குச் சந்தையில் கோடீஸ்வரர் ஒருவர், அழகு சாதனப் பொருள்கள் விற்கும் நிறுவனத் தலைவி, கம்ப்யூட்டர் துறையில் விற்பன்னன் என்று சாதனைப் பட்டியல் நீள்கிறது.

நாளை அதிபருடன் சந்திப்பு என்ற நிலையில் இந்த ஆறு பேரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க தூதரகத்திலேயே போட்டி நடத்துகிறார்கள் விளம்பர நிறுவனத்தைச் சேர்ந்த இரு பெண்கள். அவர்களிள் ஒருவருக்கு மட்டும் அதிபருடன் காலை உணவு உண்ண அழைப்பு கிடைத்திருக்கிறது. மற்றவருக்கு அது ஏகப் பொறாமையை கிளப்புகிறது. அத்துடன் அந்த மற்றவர் அகப்பட்டதைச் சுருட்டும் 'க்ளெப்டோமேனியாக்' பழக்கமுள்ளவர்.

விளம்பர நிறுவனப் பெண்கள் இரவோடிரவாக பல சுற்று திறமைப் போட்டி நடத்துகிறார்கள். லஞ்சம் கொடுத்து போட்டியில் தன்னை முன் நிறுத்திக் கொள்வது, பாலியல் குற்றம் சாட்டிப் போட்டியாளனை நீக்குவது, அறியாமையைப் பயன்படுத்தி இக்கட்டில் மாட்டி விடுவது என்று இந்திய இளைஞர்கள் இப்படித்தான் என்று வகை தொகை இல்லாமல் எப்படி வேண்டுமானாலும் போட்டியிடுகிறார்கள். வெற்றி ஒன்றே இலக்கு, அதை எப்படி வேண்டுமானாலும் அடையலாம் என்று முயற்சிக்கிறார்கள். தன்னலமும், போட்டியும், பொறாமையும் அவர்களை எப்படியெல்லாம் செலுத்துகின்றன என்பதைக் காட்டுகிறார்கள். திடீர் திருப்பமாக, வந்திருக்கும் ஒரு போட்டியாளர் தீவிரவாதி என்கிறார்கள். கடைசியில் யார் அதிபருடன் கை குலுக்குகிறார் என்பது உச்சக் காட்சி.

சுமார் 90 நிமிடம் படம் ஓடுகிறது. ஹிந்திப் படமா ஆங்கிலப் படமா என்று கூற முடியாமல் ஒரே மணிப்பிரவாளம். ஹிந்தி வசனங்களுக்கு திரையில் கீழே ஆங்கில எழுத்துப் போட்டதால் இதை ஆங்கிலப் படம் என்று வகைப் படுத்த வேண்டும். குறைந்த பட்சம் ஆறு வகைப் இந்தியப் பாணியில் ஆங்கிலம் பேசுகிறார்கள் இளைஞர்கள்.

நகைச்சுவை என்று எடுத்திருகிறார்கள். ஆனால் படம் முழுக்க அவல உணர்ச்சிதான் மேலோங்கியது. அடுத்து என்ன வரப் போகிறது என்ற குறுகுறுப்பை வளர்த்தாலும், காட்சிக்குக் காட்சி அவலம் அதிகரிப்பதால் படம் எப்போது முடியும் என்றுதான் இருந்தது.

ஒரு கதைதான் நினைவுக்கு வந்தது. இரு ஜாடிகளில் நிறைய நண்டுகள் இருக்கும், ஒன்றில் இந்திய நண்டுகள். மற்றொன்றில் வேற்று நாட்டு நண்டுகள். வேற்று நாட்டு நண்டுகள் இருந்த ஜாடி ஒரு மணி நேரத்திற்குப் பிறகு காலியாகி விடும். நண்டுகள் ஒன்றுக்கு ஒன்று உதவிக் கொண்டு அனைத்தையும் வெளியேற்றி விடும். இந்திய ஜாடியில் நண்டுகள் அப்படியே இருக்கும். உள்ளே பார்த்தால் ஏதாவது ஒரு நண்டு ஜாடியின் விளிம்புக்கு ஏற முயற்சிக்கும். மற்றவை உடனே அந்த நண்டை இழுத்துக் கீழே தள்ளி விடும்.

அவுட்சோர்ஸ்ட், ஸ்லம்டாக் வரிசையில் இந்தியக் குழப்பங்களைச் சொல்லும் இன்னொரு படம்.

Saturday, February 07, 2009

திறந்தவெளி வீதி வரைபடம் (OpenStreetMap)


விக்கீபீடியாவைப் போல் இது ஒரு திறந்தவெளி மென்பொருள் சேவை.

நம்ம ஊரில் வரைபடம் பார்த்து போகும் இடம் கண்டுபிடிப்பது வழக்கில் இல்லை. தெருமுனை டீக்கடையில் அல்லது ஆட்டோ ஸ்டாண்டில் அல்லது சிக்னலில் பக்கத்தில் நிற்கும் ஆட்டோ காரரிடம் கேட்டு 'பிடிச்சு பிக் அப் பண்ணி போய்க்கிட்டே' இருப்பவர்கள் நாம். ஆனால் சென்னை போன்ற மாபெரும் நகரங்களில் 'சுப்பு தெருவில் இருக்கும் ஹார்பர் மணி' வீட்டுக்கு வழி கேட்டால் அன்னாருக்குப் பக்கத்து வீட்டில் இருப்பவரே மேலும் கீழும் நம்மைப் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கும் நிலை வந்து விட்டது நித்திய உண்மை.

ஜிபிஎஸ் (GPS) தொழில் நுட்பம் மூலம் கைபேசியில் வரைபடம் கொண்டு வந்து விட்டார்கள். ஆனால் அவர்கள் கொடுக்கும் வரைபடம் அதரப் பழசு. சமகாலத் தெருக்களுக்கும் கைபேசி காட்டும் வரைபடத்திற்கும் சம்பந்தமே இருக்காது. அதைப் பார்ப்பவர் தவறை கைபேசி தயாரிப்பவர்களுக்குச் சுட்டிக் காட்டவும் வழி கிடையாது. கூப்பிட்டுச் சொன்னாலோ, மின்னஞ்சல் அனுப்பினாலோ மேலோட்டமாக இன்சொல் பேசிவிட்டு வெறுமே இருந்து விடுவார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு 'கூகிள் எர்த்' என்ற மென்பொருள் வெளிவந்தது. இந்த மென்பொருளை நாம் தரவிறக்கி நம் கணினியில் நிறுவி உபயோகிக்க வேண்டும். இந்த மென்பொருள் உதவியுடன் செயற்கைக் கோள் புகைப்படங்கள் மூலம் கட்டடங்களையும் தெருக்களையும் இனம் கண்டு பிடித்துப் பெயரிட முடியும். இந்தியாவின் மேல் எடுக்கப் பட்ட பல செயற்கை கோள் புகைப்படங்கள் மேல் மேகமூட்டம் தெரிந்ததால் பல இடங்களில் தரையில் இருப்பதை இனம் கண்டு பிடிக்க முடியாது. 'கூகிள் எர்த்' உபயோகித்து நாமே நம் பகுதி வரைபடத்தை தொகுத்துத் திருத்த முடியாது. கட்டடங்களுக்கும் தெருக்களுக்கும் பெயர் வைப்பதோடு சரி.

இன்றைய 'திறந்தவெளி வீதி வரைபடம்' அடுத்த கட்ட மென்பொருள் புதினம். மென்பொருளை தரவிறக்கத் தேவையில்லை. செயற்கைக் கோள் வரைபடங்கள் தெளிவாக உள்ளன (நான் பார்த்த வரை). நம்மால் செயற்கைக் கோள் பட உதவியுடன் கட்டடங்கள் மற்றும் சாலைகளின் எல்லைகளை மாற்றி எழுத (தொகுக்க) முடியும். தெளிவாக அறுதியிட முடியும். ஜீபிஎஸ் கருவி நம்மிடம் இருந்தால், நாம் சாலையில் பயணித்து பயணம் செய்த பாட்டையைக் கருவியில் பதிவு செய்து இந்த மென்பொருளில் சேர்ப்பதன் மூலமும் வரைபடத்தை மேலதிகத் துல்லியமாகத் திருத்த முடியும்.

பொதுமக்களால் பொதுமக்களுக்காக ஏற்படுத்தப் பட்டிருக்கும் இந்தச் சேவை எதிர்காலத்திற்கு மிகவும் உபயோகப் படும். அரசுக்குச் செலவில்லாமல், அவர்களின் சோம்பேறித்தனமான இடையூறும் இல்லாமல் நாமாக நம் சுற்றுப் புறச் சாலைகளை தெளிவாகவும் துல்லியமாகவும் ஒரு பொது வரைபடத்தில் பராமரிக்க இயலும். ஆனால் வரைபடத்தின் துல்லியத்திற்கு தனி ஒருவரைப் பொறுப்பாக்கி தவறுகளுக்கும், அவற்றின் காரணமாக ஏற்படும் குற்றங்களுக்கும் வழக்கு போட்டு உதைக்க முடியாத காரணத்தால் இத்தகைய வரைபடங்களை நம்பி நுகர்வதில் ஆபத்துகள் உள்ளன. ஒரு வரைபடத்தை எத்தனை போர் தொகுத்திருக்கிறார்கள் என்ற விபரம் தெரிந்து உபயோகித்தால் ஆபத்துகளை ஓரளவு தவிர்க்கலாம்.

சி கே பிரஹலாத் (New Age of Innovation) புத்தகத்தில் சொல்வது போல் அடுத்த சந்ததியினர் தொழில் நுட்ப உதவியுடன் அரசின் இடைப்பாட்டையே தூக்கி எறியும் நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். லஞ்சத்திற்கும், ஊழலுக்கும், மெத்தனப் போக்கிற்கும் பதில்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன என்று மனதில் தோன்றுகிறது.

Friday, February 06, 2009

ஹட்ஸனின் கதாநாயகன்

செஸ்லி சல்லென்பெர்கர் ஒரு அமெரிக்க விமானி. சிறிது நாட்களுக்கு முன் ஒரு ஏர்பஸ் 320 ரக விமானத்தில் அமெரிக்காவின் லா கார்டியா விமான நிலையத்தில் இருந்து 150 பயணிகளை ஏற்றிக் கொண்டு கிளம்பினார். தரையிலிருந்து மேலெழும்பிய சில நிமிடங்களுக்குள் ஒரு வாத்துக் கூட்டம் விமானப் பாதையின் ஊடே பறந்து என்ஜினில் அடி பட்டன. என்ஜின் செயலிழந்து போன போது ஹட்சன் ஆற்றில் மேல் பறந்து கொண்டிருந்த (செல்லமாக) 'சல்லி' (மதுரையில் யாரையாவது இப்படிக் கூப்பிட்டால் எலும்பை எண்ணி விடுவார்கள்!!) கொஞ்சம் கூட 'டென்ஸன்' ஆகாமல் விமானத்தை ஆற்றின் மேல் பொத்தினார் போல் இறக்கிவிட்டார். அனைத்துப் பயணிகளும் பத்திரமாகத் தப்பித்தனர். இது எல்லாருக்கும் தெரிந்த கதை.

இதையொட்டி இணையத்தில் ஆன்லைன் விளையாட்டு ஒன்றை இன்றுதான் பார்த்தேன். ஹட்சனின் கதாநாயகன் ஆக விருப்பமுள்ளவர்கள் சுட்டியைச் சொடுக்கி விளையாடிப் பார்க்கலாம்.

Sunday, February 01, 2009

தி கைட் ரன்னர் (2007)

லாண்ட்மார்க்கில் DVD கொட்டிக் கிடந்தது. ஆர்வக் கோளாறால் உந்தப் பட்டு வாங்கி வந்து பார்த்தேன். ஆர்வக் கோளாறு நன்றாகவே வேலை செய்திருந்தது. படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பெரும்பாலான வசனங்கள் பெர்சிய மொழியில் இருந்த போதிலும் (மிச்சம் ஆங்கிலம்) ஆங்கிலத்தில் கீழே எழுத்துப் போட்டதால் படம் நன்றாகப் புரிந்தது.

ஆஃப்கானிஸ்தானில் முடியாட்சி முடிந்த கால கட்டத்தில் கதை ஆரம்பிக்கிறது. ரஷ்ய ஆக்கிரமிப்புக் காலத்தினூடே நகர்ந்து தாலிபானின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆஃப்கானில் கதையை முடித்திருக்கிறார்கள். தாலிபான் ஆட்கள், ஒரு பெண்ணை அவள் கற்பில்லாதவள் என்று குற்றம் சாட்டி, பொது மக்கள் கூடியிருக்கும் விளையாட்டரங்கில் கல்லால் அடித்துக் கொல்லும் கொடுரத்தை தத்ரூபமாக நடித்துக் காட்டியிருக்கிறார்கள்.

படம் எங்கோ சீனாவில் படமாக்கப் பட்டதாம். ஆனால் ஆஃப்கானிஸ்தானை பார்ப்பது போலவே உணர்ந்தேன். இந்தப் படத்தில் ஒரு பாலியல் பலாத்காரக் காட்சியில் நடித்ததற்காக ஆஃப்கான் சிறுவர்கள் இருவரை பாரமவுண்ட் நிறுவனத்தார் அரேபிய நாட்டிற்குக் குடியேற்றினர் என்கிறது இணைய தளம்.

அமீர், ஹஸ்ஸான், அஸ்ஸீஃப் என்ற மூன்று ஆஃப்கான் சிறுவர்களைப் பற்றிய படம் இது. அமீர் பணக்கார பாபாவின் (அப்பாவின் பெயர்) மகன். காபூலில் வசிக்கிறார்கள் அப்பா கம்யூனிசக் கொள்கைகளையும், இஸ்லாம் மதத்தின் சில முரண்பாடான கொள்கைகளையும் தீவிரமாக விமரிசிப்பவர். தன் மகன் தன்னைப் போல் இல்லாமல் கோழையாக வளர்கிறான் என்று வருத்தப் படுபவர்.

ஆமீர் பட்டம் விட, பாபாவின் வேலைக்காரனான அலியின் மகனென்று வளரும் ஹஸ்ஸான் அமீர் அறுத்துப் போடும் பட்டங்களை ஓடிச் சென்று பிடித்து வருகிறான். அமீரின் நம்பிக்கையான வேலைக்காரன்.

அஸ்ஸீஃபிற்கு தெருவில் அமீரையும் ஹஸ்ஸானையும் தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு மிரட்டுவதே வேலை. ஒரு நாள் ஹஸ்ஸான் அமீர் அறுத்த பட்டத்தைப் பிடித்து வரும் போது அமீரின் பார்வை பட அஸ்ஸீஃபால் பலாத்காரம் செய்யப் படுகிறான். அமீர் தன் வேலைக்காரனை காப்பாற்றாமல், அவன் மேல் திருட்டுப் பட்டம் கட்டி வீட்டை விட்டே துரத்தி விடுகிறான்.பிறகு ரஷ்ய ஆக்கிரப்பின் போது அப்பாவுடன் தப்பியோடி அமெரிக்காவில் (கலிஃபோர்னியாவில்) குடியேறுகிறான். அங்கே அவன் ஒரு எழுத்தாளனாகி ஒரு ஆஃப்கானியப் பெண்ணை மணந்து கொள்கிறான். அப்பா செத்துப் போகிறார்.

பிறகு ஒரு நாள் அவனுக்கு ஹஸ்ஸானின் மரணம் பற்றிய தகவல் கிடைக்கிறது. அப்போதுதான், தன் அப்பா அலியின் மனைவியிடம் விளையாடிப் பெற்ற குழந்தைதான் ஹஸ்ஸான் என்று தெரிந்து கொள்கிறான். ஹஸ்ஸானுக்கு ஒரு மகன் இருப்பது தெரிந்து அவனைத் தேடி ஆஃப்கானிஸ்தான் போகிறான். தாலிபானில் சேர்ந்திருக்கும் அஸ்ஸீஃபின் பிடியில் நடனப் பையனாக (பச்சா) ஹஸாரா (ஆஃப்கான் அகதி) என்ற முத்திரையில் வளரும் அந்தச் சிறுவனைப் எப்படிப் போராடி மீட்கிறான் அமீர் என்பதுதான் கதை.

விறுவிறுப்பாகச் செல்லும் கதை. சொல்லப் பட்டிருக்கும் விதம், காட்சி அமைப்புகள், படப் பிடிப்பு அனைத்தும் சிறப்பு. ஒட்டு மொத்தத்தில் பார்க்க வேண்டிய படம். ஆஃப்கானிஸ்தான் என்ற நாட்டின் சரித்திரம் மற்றும் தற்போதைய நிலைமை பற்றி பல விஷயங்கள் விளங்கின மாதிரி உணர்ந்தேன். இந்தப் படம் பற்றிய மேலும் சுவையான பல செய்திகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

Friday, January 30, 2009

அமெரிக்க வங்கிகள் செய்யும் கூத்து

இந்த வங்கிகள் அடிக்கும் கூத்து சொல்லி மாளாது. இத்தனைக்கும் உயர் பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் எல்லாம் உலகம் போற்றும் கல்வி நிறுவனங்களில் தகுதிச் சான்றிதழ் பெற்றவர்கள்.

முதலில் கண்ணை மூடிக் கொண்டு தெருவில் நடப்பவனையெல்லாம் கூப்பிட்டுக் கடன் கொடுத்தார்கள். அவனுக்குக் கடனை திருப்பித் தர வக்கிருக்கிறதா என்று பார்க்கும் பொறுப்பிலிருந்து தெரிந்தே தவறினார்கள்.

பிறகு வரும் கடனையும் வராக் கடனையும் ஒன்றாய் கலந்து கூறு போட்டு கூவிக் கூவி விற்றார்கள். அதன் மூலம் தாங்கள் வலியப் போய் உண்டாக்கிய ஆபத்தையும் கூறு போட்டு வெளியேற்றினார்கள்.

கடன்கள் மூழ்கிப் போன பின் (தன்னிச்சையாக கட்டுப்பாடு ஏதுமில்லாமல் செயல் பட்ட) தனியார் வங்கிகள் அரசிடம் போய் குய்யோ முறையோ என்று அடித்துக் கொண்டார்கள். அமெரிக்கா விழித்துக் கொண்டு வரிப் பணத்திலிருந்து நிவாரண நிதி கொடுக்க வேண்டும் என்று முதலாளித்துவ சிந்தனைகளை மூலையில் வைத்து விட்டு வெட்கமில்லாமல் கெஞ்சினார்கள்.

அரசு முன்னே பின்னே பார்த்து, முகவாயைச் சொறிந்து கொண்டு, அரைமனசுடன் பணம் கொடுத்தவுடன், அதை வைத்துக் கொண்டு மூழ்கிப் போன கடன்களை குறைந்த விலைக்கு அள்ளுவதில் செலவு செய்தனர். பொருளாதார முன்னேற்றத்திற்கு புது முயற்சி என்று யாராவது புது கடன் கேட்டால் 'போடா போ' என்று விரட்டினார்கள்.

இத்தனை கூத்துக்கும் கேலிக்கும் பிறகும் இழி செயல்கள் தொடர்கின்றன. 'சிடிக்ரூப்' என்ற வங்கி நிறுவனம் கடந்த 15 மாதத்தில் சுமார் 15 பில்லியன் டாலர் நஷ்டம் அடைந்திருக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் 50 மில்லியன் டாலர் கொடுத்து பளபளவென்று ஜெட் விமானம் வாங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு 345 பில்லியன் டாலர் நிவாரணம் கொடுத்த கருவூலக் காரியதரிசி கூப்பிட்டுக் கடிந்து கொண்டிருக்கிறார். 'மெர்ரில் லிஞ்ச்' என்ற நிறுவனத்தில் பெரிய தலைகளுக்கு 4 பில்லியன் டாலர் ஊக்கத் தொகை கொடுத்திருக்கிறார்கள். இந்த நிறுவனத்தின் தலைவர் (பெயர்: ஜான் தைன்) சுமார் 1 மில்லியன் டாலர் செலவு செய்து சமீபத்தில் தனது அலுவலகத்தை அழகு படுத்திக் கொண்டாராம். பிரச்சினை பொதுஜன பஞ்சாயத்திற்கு வந்ததும் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டாராம்.

அதிபர் ஒபாமா "இவையனைத்தும் பொறுப்பின்மையின் உச்சம். வெட்கப் பட வேண்டிய விஷயம்" என்று கோபப் பட்டிருக்கிறார்.

'வால் ஸ்ட்ரீட்'டின் புதுப் பெயர் பேராசை தெரு என்று மாற்றி விடலாம்.

திருக்குறள் [44:8]

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்

Saturday, January 24, 2009

எ வெட்னெஸ்டே - ஹிந்தி திரைப்படம்

நீரஜ் பாண்டே இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸிருதீன் ஷா மற்றும் அனுபம் கேர் நடித்திருக்கிறார்கள். ஒரு புதன் கிழமை மதியம் இரண்டு மணியிலிருந்து மாலை ஆறு மணி நடக்கும் போலீஸ் மற்றும் தீவிரவாதம் சம்பத்தப் பட்ட நிகழ்வுகளைச் சித்தரிக்கும் படம். இந்தப் படம் திரையரங்குகளுக்கு வந்த சூட்டில் டப்பாவிற்குள் போய் விட்டதாம்.

அலுவலக நண்பர்கள் பரிந்துரைத்ததால் லாண்ட்மார்க்கில் ஒளித் தகடு வாங்கி வந்து பார்த்தேன். மோஸர் பாயர் சல்லிசான விலையில் வெளியிட்டிருக்கிறார்கள்.

காவல் துறை உயர் பதவியில் இருக்கும் அனுபம் கேர், தான் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளில் நரிமன் பாயிண்டில் கடலைப் பார்த்து அமர்ந்து பணியில் தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்களை அசை போடுகிறார். என்றைக்குமே மறக்க முடியாதது என்று இந்த அனுபவத்தைச் சொல்ல ஆரம்பிக்கிறார். படம் முழுவதும் ஃப்ளாஷ் பாக். ஃப்ளாஷ் பாக்கிலிருந்து மீளாமலே படம் முடிந்து போகிறது.

படத்தில் ஒரு வயதான (சராசரிக் குடிமகன் தோற்றமுள்ள) மனிதர் மும்பையின் பல பொது இடங்களில் (காவல் நிலையம் உட்பட) ஒரு கறுப்புப் பையைக் கொண்டு போய் யாரும் கவனிக்காத வகையில் விட்டு விட்டு வந்து விடுகிறார். பிறகு கட்டுமானம் நடந்து கொண்டிருக்கும் வானளவிய கட்டடத்தின் உச்சாணியில் அமர்ந்து கொண்டு செல்பேசியில் அனுபம் கேருக்கு மிரட்டல் விடுகிறார். செல்பேசித் தொழில் நுட்பத்தின் அனைத்து நுணுக்கங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டு அவர் எங்கிருந்து எப்படிக் கூப்பிடுகிறார் என்பது போலீஸிற்குத் தெரியாத வகையில் செயல் பட்டு அவர்களைத் திணற அடிக்கிறார். சரி, மிரட்டல் என்ன? அவர் குறிப்பிடும் நான்கு தீவிரவாதிகளை மும்பைக் காவலில் இருந்து விடுவித்து அவர் சொல்லும் இடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கும்ள் அதைச் செய்யாவிட்டால் மும்பை வெடித்துச் சிதறும். போலீஸ் இவரை நம்ப மாட்டார்கள் என்று தெரிந்து, அனுபம் கேரிடம் எந்தக் காவல் நிலையத்தில் குண்டு வைத்திருக்கிறார் என்று மட்டும் தகவல் கொடுக்கிறார். போலீஸ் அந்தக் குண்டைக் கண்டு பிடித்ததும் கதை சூடு பிடிக்கிறது. குண்டு வைத்து போலீஸை மிரட்டும் பாத்திரத்தில் நஸிருதீன் ஷா சிறப்பாக நடித்திருக்கிறார்.

சந்தையின் உச்சத்தில் இருக்கும் கதாநாயகன், துணிப் பஞ்சத்தில் வாடும் கதாநாயகி, ஆட்டம், பாட்டு, தடவல், காமெடி ட்ராக் எதுவும் இல்லாத இந்தப் படம் ஆரம்பித்தது தெரியவில்லை. முடிந்து விட்டது. அவ்வளவு விறுவிறுப்பு. பல காட்சிகளில் நம்மை இருக்கையின் விளிம்பிற்குக் கொண்டு வந்து விடுகிறார்கள். நாட்டுப் பற்று, கடமை உணர்ச்சி, குடும்பப் பாசம், துடிப்புடன் கூடிய பொறுப்புணர்ச்சி, நிதானத்துடன் கூடிய தெளிவு போன்றவைகளைச் சிறப்பாகவும் கோவையாகவும் சித்தரிக்கும் படம்.

சராசரிக் குடிமகன் யோசிக்க லாயக்கில்லாதவன், பூச்சி, தப்பைத் தட்டிக் கேட்காதவன், பயந்து வாழ்வதற்கே பிறந்தவன். வெகுண்டால் அல்லது யோசித்தால் அவன் குற்றவாளியாகத்தான் இருக்க முடியும் என்பது போன்ற நம் சமுதாயத்தின் சிந்தனைத் தளைகளை உடைத்தெறியும் படம்.

ஆங்கிலப் படத்திற்கு இணையாக எடுத்திருக்கிறார்கள். 'வில்லு' வெல்லாம் இதனிடம் பிச்சை வாங்கக் கூட லாயக்கில்லாத படம். ஒளித்தகட்டில் காசு கொடுத்து வாங்கிப் படம் பார்த்து படம் எடுத்தவர்களை ஊக்குவித்தால் ஒருவேளை உங்கள் பேரப் பிள்ளைகளுக்கும் எனது பேரப் பிள்ளைகளுக்கும் கிடைக்கவிருக்கும் இந்திய பொழுது போக்குத் தேர்வுகளின் சராசரித் தரம் உயர வாய்ப்புள்ளது.

ஸ்லம் டாக் மில்லியனர் - என் அனுபவம்

இன்று சென்னை 'சத்யம்' திரையரங்கில் காலை காட்சிக்கு மகள் மற்றும் மனைவியுடன் போனால் அங்கே இது பெரியவர்களுக்கு மட்டும் என்று மகளை கதவில் நிறுத்தி விட்டார்கள். சரியென்று அம்மாவும் மகளும் டிக்கட்டை விற்று விட்டு 'மாடகாஸ்கர் 2' பார்க்கச் சென்று விட்டனர். நான் மட்டும் உள்ளே போய் உட்கார்ந்தால் பக்கத்துச் சீட்டில் (மனைவி விற்ற சீட்டில்) ஒரு அம்மாவும் அவர் கூட்டி வந்த 'பெரியவரும்' வந்து உட்கார்ந்தார்கள். படம் முழுக்க பெரியவர் அம்மாவிடம் 'அம்மா எனக்குப் பாகூன் (பாப் கார்னாம்!) வேணும், சாக்கி வேணும் என்று கேட்டு நம்மையும் அவ்வப்போது பிஞ்சுக் காலால் இரண்டு உதை உதைத்து மகிழ்வித்தார்.

சத்யம் நிறுவனத்தில் ஆளுமை பிரச்சினை என்று உலகமே பேசிக் கொள்கிறார்கள். இந்தச் 'சத்யம்' கூட 'அது' சேர்ந்ததுதானோ என்று யோசித்துக் கொண்டே படம் பார்த்தோம். இனி படம்:

ஜமால் மற்றும் அவன் அண்ணன் பற்றிய படம். இருவரும் பம்பாய் சேரியைச் சேர்ந்த சிறுவர்கள். ஒரு கலவரத்தில் அம்மா செத்துப் போக அனாதையாகி விடுகிறார்கள். நம் பள்ளிக் கரணை குப்பைக்காடு போன்ற பிரம்மாண்டத்தில் குப்பை பொறுக்கித் திரிகிறார்கள். குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் கும்பலிடம் பிடிபட்டுத் தப்பிக்கிறார்கள். ஒடும் ரயிலில் வடை விற்றுப் பிழைக்கிறார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டும் வேலை செய்து அவர்களிள் பலரை ஏய்க்கிறார்கள். டாலர் சுருட்டுகிறார்கள். அவர்களில் ஒருவன் வளர்ந்தவுடன் பி பி ஓ (BPO) நிறுவனத்தில் காபி பாய் ஆகிறான். பிறகு அங்கேயே பி பி ஓ பணி செய்கிறான். ஒரு நாள் 'கௌன் பனேகா கரோர்பதி' ஆட்டம் ஆடுகிறான்.

ஏறக்குறைய எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லி விட்டான். கடைசிக் கேள்வி கேட்க வேண்டிய வேளையில் நேரம் முடிந்து போய் சங்கு ஊதி விடுகிறார்கள். கடைசிக் கேள்வியை நாளைதான் விளையாட வேண்டும். இந்த நிலையில் விளையாட்டை நடத்துபவருக்குச் சந்தேகம். சேரிப் பையனுக்கு இவ்வளவு மதியா? ஒருவேளை 'ராமலிங்க ராஜூ' வகையறாவாக இருக்குமோ என்று சந்தேகப் பட்டு போலிஸிடம் அனுப்புகிறார். அவர்களும் முட்டிக்கு முட்டி தட்டி விசாரிக்க ஒவ்வொரு கேள்விக்கும் தன் வாழ்க்கைப் போக்கிலேயே பதில் கிடைத்ததை ஜமால் இன்ஸ்பெக்டருக்கு விளக்குகிறான். அடுத்த நாள் விளையாட அனுமதிக்கிறார்கள். இங்கேதான் க்ளைமாக்ஸ்.

இடையில் ஜமாலின் அண்ணன் மும்பை தாதாவிடம் சேர்வது, அண்ணனின் துரோகம், ஜமால் - லத்திகா காதல் என்று சுவாரசியங்கள் புத்திசாலித்தனமாகப் பிணைக்கப் பட்டுள்ளன. மும்பை தாதாவிடம் சிக்கிய லத்திகாவும் ஜமாலும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்று திரையில் காண்க.

சேரியின் அடித்தரத்திற்கும் கீழான வாழ்க்கை தரம், அனாதைக் குழந்தைகளை குருடாக்கிப் பிச்சைக்கும், அழகாக்கி விபச்சாரத்திற்கும் உபயோகிப்பது போன்ற இந்திய அவலங்கள் மிகத் தத்ரூபமாகக் காட்டப் பட்டிருக்கின்றன. சில காட்சிகள் அப்படியே நம்மை உறைய வைக்கும். மற்றபடி 'ஏ' முத்திரைக்கு வேறு காரணங்கள் ஏதும் இல்லை (மனைவி மற்றும் மகளுடன் 'ஏ' என்று தெரியாமல்தான் போனேன் என்பது நினைவில் இருக்கட்டும்).

முக்கால் வாசிப் படத்தில் பின்னணி இசையே இல்லை. தேவையும் இருக்கவில்லை. ரஹ்மான் 'ஜெய் ஹோ' பாடலில் கலக்கி விட்டார்.

பார்க்க வேண்டிய படம். ஆனால் படம் சீக்கிரம் பெட்டிக்குள் போய் விடும். ஆஸ்காருக்குப் பரிந்துரைத்திருப்பது மகிழ்ச்சி. பரிசு வாங்க வேண்டும் என்பது நம் ஆசையும் கூட. ஆனால் சந்தேகம்தான்.

Tuesday, January 20, 2009

அதிபர் பராக் ஒபாமாவின் பதவியேற்பு

அமெரிக்கக் கிழக்கு கடற்கரை நேரப் படி 20-1-2009 நண்பகல் 12 மணிக்கு அமெரிக்க அரசியலமைப்பு சட்டப் படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கு சில மணித்துளிகள் முன்னதாகவே ஒபாமா அதிபராகி விட்டார். மனிதர் விழாவிற்கு நடந்து வந்த போது சற்று பதற்றமாகத் தெரிந்தார். ஆனால் பதவிப் பிரமாணத்தின் போது தலைமை நீதிபதி பதவிப் பிரமாணத்தின் 35 வார்த்தைகளாலான வாக்கியங்களில் சற்று இடறிய போதும், மனிதர் கலங்காமல் பொறுமை காத்தார். கம்பீரமாக பதவி ஏற்றார்.

அதிபரின் முதல் உரையில் "உலகை வழி நடத்த அமெரிக்கா மீண்டும் தயாராகி விட்டது" என்றார். மிகவும் ஆழமான வார்த்தைகள். முந்தைய அதிபரின் எதிரிலேயே இந்தக் கருத்தை (இம்சைப் படுத்தாமல்) ஆனால் தைரியமாகச் சொன்னதன் மூலம் உண்மையை மாபெரும் சபையில் ஒப்புக் கொண்டு, தன்னைத் தானே ஏற்றுக் கொண்டிருக்கும் பெரும் பொறுப்பிற்குள் ஆழ்த்திக் கொண்டார்.

மேலும் 'விடுதிகளில் சமமாக அமர்ந்து சாப்பிடக் கூடிய உரிமை மறுக்கப் பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவன் இங்கே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு இந்த நாட்டில் மாற்றம் மலர்ந்திருக்கிறது' என்று சொல்லி வெள்ளையர், கறுப்பர் என்று மாறுபாடில்லாமல் வானளாவிய கரவொலியைப் பெற்றார்.

தனது பதினெட்டு நிமிட முதல் உரையில் பொருளாதாரப் பிரச்சினை, ஈராக், ஆப்கானிஸ்தான், சுற்றுச் சூழல் பிரச்சினை அனைத்தையும் தொட்டார்.

முந்தைய அதிபர் விழாவிற்கு வந்திருந்து சிறப்பித்ததுடன் பெருந்தன்மை மற்றும் பொறுப்பான புன்னகையுடன், கையில் இருந்த அத்தனை அதிகாரத்தையும் அமைதியாக கைமாற்றி விட்டு, ஆட்டுக் குட்டி போல் ஹெலிகாப்டரில் கிளம்பி விட்டார். நம்ம ஊரில் நடக்குமா?

Friday, January 09, 2009

நரிக்கு நாட்டாமை கொடுத்தால்...

  1. இந்த இடுகை முழுவதும் என் சொந்தக் கருத்து மட்டுமே. வேறு எவரும் இதில் சம்பத்தப் படவில்லை

  2. அண்மையில் களங்கப் பட்டிருக்கும் நிறுவனத்தில், அதன் ஊழியர்களிடம் இருக்கும் சத்தியம், அவர்கள் செய்யும் சேவையில் இருக்கும் சத்தியம் மற்றும் களங்கப் பட்டிருக்கும் நிறுவன நுகர்வோர் நம்பிக்கையில் உள்ள சத்தியம் பற்றி நாம் மிகவும் மரியாதை வைத்திருக்கிறோம். அவர்களை எள்ளளவும் சந்தேகப் படவோ, சிறுமைப் படுத்தவோ நாம் இதன் மூலம் விழையவில்லை

நரிகள் ஆட்டுத்தோல் போர்த்திக் கொண்டு கிடையில் நாட்டாமை செய்திருக்கிறார்கள். குட்டு வெளியாகும் என்ற பயம் வந்ததும் தலைமை நரி நான் மட்டும்தான் தோல் போர்த்தியிருக்கிறேன். மற்றவர்கள் உண்மையிலேயே ஆடுகள் என்று அறிக்கை விட்டிருக்கிறது.

எது நரி, எது ஆடு என்று இனம் புரியாமல் எல்லாரும் தவித்துக் கொண்டிருக்கையில் வெளியேறிய நரி சொல்வதை எல்லோரும் நம்புங்கள், நாங்களெல்லாம் ஆடுகள்தான், நாட்டாமைக்கு வருகிறோம் என்று சிலர் கிளம்பினார்கள்.

நீ இதுவரை ஏற்றுச் செய்த தலைமைப் பொறுப்பில் உன் தலை மேல் வரவுக் குறிக்கோள், செலவுக் குறிக்கோள், லாபக் குறிக்கோள் என்று எவரும் கத்தி வைக்கவில்லையா? தணிக்கை செய்யப் பட்ட காலாண்டு அறிக்கைகளை உலகத்திற்குச் சொன்ன போது உனக்குச் சொல்லவில்லையா? நடப்புக்கும் அறிக்கைக்கும் வித்தியாசம் இருந்திருக்குமே அதை உனக்குக் கண்டு பிடிக்கத் தெரியவில்லையா? உன்னை பொம்மலாட்ட பொம்மை போல் செலுத்திக் கொண்டிருந்தார்களா? அப்படி செலுத்திய மேலதிகாரிகள் கீழே நீ நீடிக்கக் காரணம் என்ன? என்றெல்லாம் கேட்க நம் மர மண்டைக்கே தோன்றுகிறது. புறப்பட்ட 'ஆடு'களைக் கேள்வி கேட்க நாதியில்லாமல் இருந்த மாதிரித் தெரிந்தது.

"குற்றம் நடக்காததற்கு எவண்டா சாட்சி இங்கே" என்றார்களாம். "குற்றம் சாட்டப் பட்டவந்தான் ஐயா!" பதில் வந்ததாம் பணிவாக!! 'கேட்பவன் கேணையன் என்றால் எருமை கூட ஏரோப்பிளேன் ஒட்டும்' என்பார்கள். அந்தக் கதை ஏறக்குறைய அரங்கேறிக் கொண்டிருந்தது.

நிறுவனத்தின் தரத்தை உலகறிய அளந்து காட்டுவதில் என்னை விட விற்பன்னன் எவன் என்று மார் தட்டிய வணிகச் செய்தி ஊடகங்களும், ஆய்வு நிறுவனங்களும், மக்கள் கவனத்தை திசை திருப்பும் பரபரப்புச் செய்தி வெளியிடுவதில்தான் குறியாக இருக்கிறார்கள்.
இவர்களில் எவனுக்கும் இதுவரை 'ஐயா தவறுகளை உடனுக்குடன் வெளிச்சம் போடத் தவறிவிட்டேன். என் கணிப்புகளையும் ஆய்வறிக்கைகளையும் மிகவும் நம்பியதாலும் கூட பலர் பணத்தை நரிக்குக் கொடுத்து விட்டு விழிக்கிறீர்கள். வருந்துகிறேன். திருத்திக் கொள்கிறேன்" என்று சொல்லும் தைரியமும் பக்குவமும் இல்லை. பொறுப்பை தானாகக் கையில் எடுத்துக் கொண்டு சரியாக வேலை செய்யாதவனும் ஒருவகையில் தவறுக்குத் துணை செல்பவனே. இவர்களில் எத்தனை பேர் நரிகள் கொடுத்த விருந்துகளிலும் கேளிக்கைகளிலும் திளைத்துக் களித்தவர்கள் என்று எவருக்கும் நினைவில் வரவில்லை. சிக்கிக் கொண்ட "ப்ரைஸ்வாட்டர் ஹவுஸ்" மேல் எரியும் தீயில் இவர்கள் குளிர் காய்கிறார்கள்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் இருக்கும் மற்ற நிறுவனங்கள் சில (பெயர் சொல்ல விரும்பவில்லை) நானே கடைந்தெடுத்த மாணிக்கம் என்ற தொனியில் பிளிறிக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் அறியாமையை தெளிவாகப் படம் போட்டுக் காட்டுகிறது.

மத்திய அரசு வரலாற்றில் இல்லாத முதல் முறையாகத் தலையிட்டிருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

திருக்குறள்

தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்

என்குற்ற மாகும் இறைக்கு [குற்றங்கடிதல் 43:6]

Saturday, January 03, 2009

நினைவில் நின்றவை

30 வருடம் முன்பு பள்ளிக் கூடத்தில் படித்த தமிழ்ப் பாடம் - இன்று காலை பின்வரும் தமிழ் பாடல் திடீரென எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் முழுமையாக நினைவுக்கு வந்தது. எளிமைக்கு இத்துணை சக்தி உண்டு என்பது புலப்படுகிறது!!

கிளையினிற் பாம்பு தொங்க
விழுதென்று குரங்கு தொட்டு
விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கென்று குதித்ததைப் போல்
கிளைதோறும் குதித்துத் தாவி
கீழுள்ள விழுதையெல்லாம்
ஒளிப் பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சி போய்த் தன் வால் பார்க்கும்

Wednesday, December 31, 2008

ஹார்ஸ்லீ குன்று

ஆந்திர மாநிலத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலை முடியும் இடத்தில், மதனபள்ளி என்ற ஊரின் அருகில் அமைத்திருக்கும் இந்த ஆந்திராவின் ஊட்டி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. மூன்று நாட்கள் இங்கே தங்கியிருந்தோம். குன்றின் பரப்பளவு மிகவும் சிறியது. 100 மனிதர்களுக்கு மேல் போனால் குன்றில் கூட்டம் தாங்காது. சுகமான குளு குளு தட்ப வெப்பம். கிடைத்தற்கரிய இயற்கை காட்சிகள். இந்த இடத்தில் 2008 ஐ இனிதே முடித்துக் கொண்டோம்.

இனிய 2009 நல்வாழ்த்துகள்!

Thursday, December 25, 2008

அபியும் நானும் - என் கருத்துகள்


[தமிழ் மணம் பதிவர்கள் கொடுத்த 'பில்ட் அப்' ஆல் உந்தப் பட்டு என் பெண்ணும் கூட வரச் சொல்லிக் கேட்க, நேற்று பிரார்த்தனாவில் படம் பார்த்தோம். தமிழ் மணத்தில் 'படம் பார்த்தால் அனுபவிக்கணும் ஆராயக் கூடாது' என்று கை மேல் ஏற்கெனவே போட்டிருப்பதால் இங்கு அனுபவம் வரும் முன்னே, ஆராய்ச்சி வரும் பின்னே!!]

கனமான கருத்தை (அப்பா - மகள் உறவு) ஆர்ப்பாட்டம் இல்லாமல், அட்டகாசம் இல்லாமல், அதிரடி இல்லாமல், ஃபார்முலா இல்லாமல், சுவாரசியமாக எடுத்திருக்கிறார்கள். அப்படியும் கடைசியில் படம் ஆமை வேகத்தில் நகர்கிறது.

மூணார் மற்றும் குன்னூர்(?) காட்சிகள் கண்ணுக்குக் குளிர்ச்சி. உறுத்தாத படப் பிடிப்பு. 

ப்ரகாஷ் ராஜ் சில சமயத்தில் மிகையாக நடிப்பார் என்பது என் கருத்து. இந்தப் படத்தில் அளவோடு நடித்து சிறப்பித்திருக்கிறார். த்ரிஷா பெண்ணை குறும்புக் காரப் பெண்ணாகப் பார்த்திருக்கிறேன், துள்ளும் இளசாகப் பார்த்திருக்கிறேன்(உஸ்ஸ்.. சற்று கிட்டே வாரும் ஐயா! கவர்ச்சிக் கன்னியாகப் பார்த்திருக்கிறேன் என்று சொன்னால் உதைத்தாலும் உதைப்பார்கள், நம் காதோடு இருக்கட்டும்). குணச் சித்திரத்தில் இதுதான் முதல் தடவை. ப்ரகாஷை மீறிப் பிரகாசித்திருக்கிறார். ஐஸ்வர்யாவின் முகவெட்டை வைத்துக் கொண்டு அவரால் உணர்ச்சிப் பூர்வமான பாவங்களை வெளிப் படுத்த முடியாது என்பதும் என் கருத்து. கண்ணால் பேசியே இந்தப் படத்தில் சாதித்திருக்கிறார். நன்றாகச் செய்திருக்கிறார். வாழ்த்துகள். சும்மா வாஸ்துவுக்காக ப்ரித்வி ராஜை சேர்த்திருக்கிறார்கள் போலும்.

மனைவியை தப்பாகப் புரிந்து அறைந்து விட்டு பிறகு அவரிடம் கெஞ்சும் இடம், நடுத்தெருவில் தன் பெண் சட்டையை உருவிக் கொண்டு வீட்டுக்குப் போகச் சொல்லும் காட்சியில் முதலில் கூனிக் குறுகிப் போய் நடக்கும் ப்ரகாஷ் ராஜ், பிறகு பெண் செய்த நல்ல காரியம் புரிந்து நெஞ்ஜை நிமிர்த்திக் கொண்டு நடக்கும் கட்டம், கடைசியில் மனைவியை சரியாகப் புரிந்து கொண்டு அவருடைய பெற்றோரை தானே அபியின் கல்யாணத்திற்குக் கூப்பிடுவதாகச் சொல்லும் கட்டம் முதலியவற்றில் ப்ரகாஷ் ராஜ் தனது 'ட்யுப் லைட்' பாத்திரத்தை மிக நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். மற்றவர்களும் சளைக்கவில்லை.

படத்தை எப்படி முடிப்பது என்று திணறியிருப்பது புரிகிறது. க்ளைமாக்ஸ், ஆன்டை(anti) க்ளைமாக்ஸ், க்ளைமாக்ஸ் தொடர் போரடிக்கிறாது. ஜஸ்பீர் - ரவி காதல் தேவையற்ற ஒட்டு.

மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக் கூடிய மற்றுமொரு 'ப்ரகாஷ் ராஜ் - ப்ரித்வி ராஜ் முத்து'.

இனி தீவிர ஆராய்ச்சியை விரும்புபவர்கள் படிக்கலாம்.

பெண் சிசுவை நெல் கொடுத்துக் கொல்லும் சமகால அப்பன் கதைகளைக் கேட்டிருக்கிறோம், பெண் குழந்தை பெற்று, மனைவி வயிற்றை இரண்டு முறை ஏற்கெனவே கிழித்திருந்தாலும் பரவாயில்லை, மூன்றாவதாக ஆண் குழந்தைக்கு முயற்சிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த சமகால அப்பன்களை பார்த்திருக்கிறேன். பெண் பிறந்து விட்டாள், இனி அடுத்த குழந்தையும் பெண்ணாகப் பிறந்தால் ஆண்டியாகி விடுவேன் என்ற மனப்பான்மையை நெருங்கியிருந்து கேட்டிருக்கிறேன். சுற்றத்தின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் பயந்து பெண்ணை விரும்பாத உறவுக்குக் கட்டி வைத்துவிட்டு பிறகு வருத்தப் பட்ட அப்பனையும் பார்த்திருக்கிறேன். இத்தகைய அப்பன்கள் நிறைந்த தமிழ் நாட்டில் அபியின் அப்பா எந்தச் சராசரி அப்பனை பிரதிபலிக்கிறார் என்று புரியவில்லை.

அபியின் அப்பாவையும் சேர்த்து மேற்கூறிய அப்பாக்களைத் தயாரித்து சந்தையில் விடுபவர்கள் பெண்களாகிய அம்மாக்கள்தாம். அவர்களுக்கு என்ன சுதந்திரம் இருக்கிறது (அ) இருந்தது என்ற கேள்வி எழலாம். சற்றே சுதந்திரம் கிடைத்திருக்கும் சமகால நகர்புற அம்மாக்கள் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு சற்று யோசித்தால் எதிர் கால அப்பாக்கள் வேறு மாதிரி இருக்க வாய்ப்பு உண்டு. நாட்டுப் புறத்தில் இந்தப் படம் ஓடுமா என்பதே சந்தேகம்.

தற்போதைய இளம் பெண்கள் (நாட்டுப் புறத்திலும் சரி, நகர் புறத்திலும் சரி) அபியைப் போலவே 'சுகுர்' ராக இருக்கிறார்கள். எல்லாம் கேபிள் தொலைக்காட்சி செய்த மாயம். அவர்கள் உருவாக்கும் ஆண்களுக்கு மேலும் பரந்த மனப்பான்மையை ஊட்டி வளர்ப்பார்கள் என்று நம்பலாம்.

மொத்ததில் எதிர்காலத்தின் மேல் நம்பிக்கை வளர்க்கும் கருத்துக்களை தூண்டி விட்ட படம்.

இனி போட்டுத் தாக்குங்கள்!! காத்திருக்கிறேன்.

Wednesday, December 17, 2008

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் செய்தது சரியா?!

இரண்டு நாளாக முதலிட்டாளர்கள் சத்யம் நிறுவன மேலாளர்களை நார் நாராகக் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் சத்யம் அதன் தலைமை பொறுப்பில் இருப்பவரின் மகன் நடத்தும் இரண்டு நிறுவனங்களை 1.5 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க முயற்சித்ததுதான்.
  • 'மேய்டாஸ் இன்ஃப்ரா' மற்றும் 'மேய்டாஸ் ப்ராப்பர்டீஸ்' என்ற இரண்டு நிறுவனங்களும் ராமலிங்க ராஜூவின் மகன் நடத்தும் நிறுவனங்கள். அவற்றின் சந்தை மதிப்பீடு 1.5 பில்லியன் டாலர் அளவிற்கு இல்லை என்று அதிரடியாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள்
  • சத்யம் செய்யும் கம்யூட்டர் தொழிலுக்கும் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை
  • கம்ப்யூட்டர் தொழிலில் கொடிகட்டிப் பறந்து லாபம் ஈட்டிய பணத்தை செலவு செய்யாமல் இருப்பில் வைத்திருந்தார்கள் சத்யம் மேலாளர்கள். இந்த இரண்டு நிறுவனங்களையும் வாங்கினால் சத்யம் சேமித்து வைத்திருக்கும், முதலீட்டாளர்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய லாபப் பணம், ராமலிங்க ராஜூவின் குடும்பத்தினரைப் போய்ச் சேரும். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் இதற்காகக் கடன் வாங்கத் தேவையிருக்கும்
  • இவ்வளவும் தெரிந்திருக்க வேண்டிய 'போர்டு' உறுப்பினர்கள் எப்படி இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை? அவர்களுக்குப் போதிய சுதந்திரம் சத்யம் நிறுவனத்தால் வழங்கப் பட்டதா?
  • ஐ டி தொழில் செய்யத்தான் உங்களுக்குப் பணம் கொடுத்தோம். சம்பந்தமில்லாத தொழிலில் இறங்கும் முன் முதலீட்டாளர்களான எங்களை ஒரு வார்த்தை கேட்டிருக்க வேண்டும்
ஆகியவை முதலீட்டாளர்கள் முன் வைக்கும் வாதங்கள். நியாயமான வாதங்கள்!!

ராமலிங்க ராஜூ 'சத்யம் முதலீட்டாளர்கள் உணர்ச்சிகளை மதித்து நிறுவனங்களை வாங்கும் முயற்சியைக் கை விட்டு விட்டது' என்று அறிவித்திருக்கிறார்.

சந்தையில் மிகுந்த மதிப்பை ஈட்டியிருந்த சத்யம் நிறுவனர்கள் ஒரே நாளில் 420 ரேஞ்சிற்குத் தள்ளப் பட்டு விட்டார்கள். மீளுவது கடினம் என்றுதான் தோன்றுகிறது. 

ஓபெக் நாடுகள் எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது சரியா?

நேற்று முழுவதும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் 'எண்ணெய் கூட்டாளிகள் சதி!! உற்பத்தியைக் குறைக்கத் திட்டம்? எண்ணெய் விலை திரும்பவும் உயரப் போகிறது !!!' என்ற கூச்சல்.

பீப்பாய்க்கு $147 ஐ தொட்ட எண்ணெய் விலை இன்று $43 இல் வந்து நிற்கிறது. இந்த விலை குறைவிற்கு முக்கியக் காரணம் சந்தையில் எண்ணெய் வாங்குபவர்கள் தேவை குறைந்திருப்பதால்தான். தேவை குறைவதற்கு நாம் யூகிக்கக் கூடிய காரணங்கள் இரண்டு
  1. விலை ஏறிய போது இன்னமும் ஏறப் போகிறது என்று மேலதிக விலை கொடுத்து தேவைக்கு அதிகமாக வாங்கிப் பதுக்கியவர்கள், சேமிப்பில் இருக்கும் உபரி எண்ணெயை உபயோகிக்கிறார்கள்
  2. வளர்ந்த நாடுகள் பொருளாதாரச் சரிவையும், வளரும் நாடுகள் பொருளாதார வளர்ச்சித் தேக்கத்தையும் சந்ந்தித்து வருவதால், முன்னேற்பாடாக பல தொழில் துறைத் தலைவர்கள் இடுப்பு நாடாவை இறுக்கிக் கட்டிக் கொண்டு விட்டனர். இவர்கள் உற்பத்தியைக் குறைத்ததால் எரிபொருள் தேவையும் குறைந்து விட்டது
ஆகவே சந்தையில் எரிபொருளுக்கான தேவை விலையை நிர்ணயிக்கிறது. தேவையற்ற எண்ணெயை சேமித்துக் காக்க வேண்டியது ஓபெக் நாடுகளுக்கு மேலும் சுமை.

பொருளாதாரச் சரிவுகளில் இருந்து உலகம் மீள ஆறு காலண்டுகளுக்கு மேலும் ஆகக் கூடும் என்று தெரிகிறது. ஆக உற்பத்தியைக் குறைப்பதில் நியாயங்கள் இருப்பது நமக்குப் புலப்படுகிறது.

Blog Archive