Sunday, June 28, 2009

மாசிலாமணி (திரைப்படம் பார்த்த அனுபவம்)

இட்லிக்கும் பொங்கலுக்கும் என்ன வித்தியாசம் என்று இந்தப் படத்தைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம் ஐயா! பாட்டுகள் பரவாயில்லை. 'சிக்கு சிக்கு பூம் பூம்', 'ஓ திவ்யா', 'டோரா டோரா' நமக்குப் பிடித்திருந்தன. மற்ற படி இரண்டரை மணி நேர ரம்பம்.


கதாபாத்திரங்களை அறிமுகப் படுத்தவே 45 நிமிடம் எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர். கதை என்று ஒன்று இந்தப் படத்தில் இருக்கப் போகிறதா என்று கவலைப் பட ஆரம்பித்து விடுகிறோம் நாம். கடைசி கதாபாத்திரமாக இன்ஸ்பெக்டர் இடைவேளைப் பக்கம்தான் படத்தில் வருகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..

கதாநாயகனுடன் வரும் இரண்டு நண்பர்கள் அடிக்கும் லூட்டி இருக்கும் போது எம் எஸ் பாஸ்கர், கருணா டிராக் எதற்கு என்று இன்னமும் புரியாமல் கிடக்கிறோம்.

கதாநாயகி ஒவ்வோரு கோணத்தில் அசினை நினைவூட்டுகிறார். நடனமாடும் போது சில சமயம் அசின் மாதிரி ஆடுகிறார் என்று எனக்குத் தோன்றியது..

படத்தில் எழுத்துப் போட்டவுடன் முதல் ஆளாக வெளியே ஓடி வந்து விட்டேன் (குடும்பத்துடன் போனதால் நடுவே ஓட இயலவில்லை). மற்றபடி சொல்லிக் கொள்ளும் படியாக் எதுவும் இல்லை. கொஞ்ச நாளில் சன் ம்யூஸிக் சானலில் பாட்டுகளையும் காமெடி காட்சிகளையும் பார்த்து விடலாம். மற்றதற்கெல்லாம் காசு கொடுத்துப் பார்ப்பது தேவையற்ற விஷயம்.

கல்பாத்தி சகோதரர்கள் முதலில் கணினிப் பயிற்சி கொடுத்தார்கள். பிறகு ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்தார்கள். இப்போது திரைப்படம் தயாரிக்க இறங்கியிருக்கிறார்கள்.

பெய்யெனப் பெய்யும் மழை....

போன வாரமெல்லாம் இந்தியாவில் மழை தவறிப் போய் விட்டது. இப்படியே விட்டால் பஞ்சம், பட்டினி, விலைவாசி உயர்வு என்று நாடே கெட்டுப் போய் விடும் என்று கட்டியம் கூறி பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். நேரங் கெட்ட நேரத்தில் புயல் அடித்து பருவ மழையையே கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டது என்று அந்தப் புயலைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார்கள். சிலர் ஒரு படி மேலே போய் எங்கோ இருக்கும் 'எல் நீனோ' தான் இதற்கும் காரணம் என்றார்கள்

பருவமழை இரண்டு நாட்களாக முன்னேற ஆரம்பித்த உடன் பிரியாணி சாப்பிட்டு பீடா போட்டு விட்டு எல்லாரும் தூங்கப் போய் விட்டார்கள். வருடங்களும் ஒடிக் கொண்டுதான் இருக்கின்றன. பருவமழையும் அவ்வப் போது கண்ணாமூச்சி காட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

நம் நாட்டில் ஒருவன், தான் கல்லில் இடறிக் கொண்டு 'கல் தடுக்கி விட்டது' என்று சிறு வயதிலேயே சொல்லப் பழகுகிறான். முள்ளின் மேல் தான் காலை வைத்து விட்டு 'முள் குத்தி விட்டது' என்று குற்றம் சொல்கிறான். இப்படியே ஏதாவது இசகு பிசகாக நடக்கும் போது வெளி உலகின் மேல் பழியைப் போட்டு விட்டு நிம்மதியாக அடுத்த வேலையைப் பார்க்கும் மனப்பான்மை அல்லது கலாச்சாரம் வளர்ந்து கிடக்கிறது. கையாலாகாத்தனத்திலால் வளர்ந்த கலாச்சாரம் இது.

பருவ மழை ஏன் இப்படி பருவத்தில் பொய்க்கிறது. இயற்கையைக் குலைக்க நாம் செய்யும் நாச காரியங்கள் என்ன என்று யோசித்துத் திருத்திக் கொள்ளலாம். அல்லது மழை அதிகம் கிடைக்கும் போது கிடைக்கும் தண்ணீரைப் பாதுகாப்பது. உபரியாகக் கிடைக்கும் இடங்களில் இருந்து இல்லாத இடங்களுக்குக் கொண்டு செல்ல வழி வகுப்பது என்று காரியம் செய்யலாம். இதையெல்லாம் செய்ய வேண்டிய அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்குச் சலாம் போட்டுக் கொண்டிருக்கும் வரை நாம் கையாலாகத்தனத்தில் மேலும் கையைப் பிசைந்து கொண்டிருக்கலாம். அல்லது கிடைக்கும் முதல் வாய்ப்பில் பெட்டியைக் கட்டி நம் பிள்ளைகளை வெளி நாட்டில் குடியேற்றி விடலாம்.

என்னது?.... சின்ன வயசிலேயே குழந்தைக்கு சரியாக யோசிக்கக் கற்றுக் கொடுக்கலாமா? அப்படிச் செய்தாலாவது அடுத்த தலைமுறை இந்தியாவைப் பார்த்துக் கொள்ளுமா? வாரும் ! அப்படிச் செய்த நாடுகள் எல்லாம் உருப்பட்டு விட்டனவா என்று கொஞ்ச நேரம் பொழுது போக்காய் தர்க்கம் பண்ணி விட்டு நடக்கிற காரியத்தைப் பார்க்கப் போவோம்.

Saturday, April 11, 2009

பட்டாளம் - திரைப்பட அனுபவம்

நம்ம அபிமான நடிகை 'நத்தூஸ்' நடித்த படம் என்பதாலும், என் பெண் பரிந்துரைத்ததாலும் நேற்று சத்யம் 'சிக்ஸ் டிகிரீஸ்' திரையரங்கில் 'பட்டாளம்' பார்த்தோம். என் பெண் 'அப்பா! எங்களுக்கெல்லாம் செம ஜோக்காக இருக்கும்! உங்களுக்கு எப்படிப் பிடிக்கும் என்று எனக்குத் தெரியாது' என்று முன் ஜாக்கிரதை செய்து கொண்டார்.

நதியா கிருத்துவ நிறுவனம் நடத்தும் பள்ளியின் 'கரெஸ்பாண்டெண்டாக' வருகிறார். தன் பள்ளியில் ப்ளஸ் 2 படிக்கும் எட்டு இளவட்டங்கள் கூத்தடிக்கும் போதெல்லாம் அவர்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும், தண்டிக்கக் கூடாதென்று சுற்றியிருப்பவர்களுக்கு அறிவுறுத்துகிறார். அவர்களை அடித்துத் திருத்த முயற்சிக்கும் ஒரு ஆசிரியரை கண்டிப்புடன் பணி நீக்கம் செய்கிறார்.


திடீரென்று பார்த்தால் 'நத்தூஸ்' அதே நிறுவனம் நடத்தும் ஒரு மன நோய் காப்பகத்தில் 'ஸ்டெதாஸ்கோப்'புடன் திரிகிறார். அங்கிருக்கும் மருத்துவர்களுடன் நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பது எப்படி என்று விவாதிக்கிறார்!!


நடுவில் ஒரு கன்னிகாஸ்த்ரி ப்ளஸ் 2 படிக்கும் அநாதை மாணவி ஒருவரை நதியாவிடம் ஒப்படைக்க, அவர் நம் எட்டு இளவட்டங்கள் படிக்கும் அதே வகுப்பில் இளம் மாணவியைப் புகுத்துகிறார். படத்தில் காதல், பொறாமை, கொலை வெறி, எல்லாம் உள்ளே வருகிறது. அது வரை படத்தில் வரும் 'ஜோக்குகளை' என் பெண் ரசித்துச் சிரிப்பதை நான் ரசித்துக் கொண்டிருந்தேன்.


நம் எட்டு பேர் குழு தலா நான்கு பேருள்ள இரண்டு குழுக்களாக தம்மை பிரித்துக் கொண்டு ஆரம்பத்திலிருந்தே அடித்துக் கொள்பவர்கள். மற்ற பள்ளிகளுடன் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளின் போது இந்த அடிதடி முற்றிப் போய் பள்ளியின் மானம் கப்பலேறும் நிலை வருகிறது. நதியா பொறுமையை சற்றே இழந்து நம் கதாநாயகர்களைத் திட்டி விட்டுப் போகிறார். அவர்களுக்கு ரோஷம் வந்து விடுகிறது. ஒன்று சேர்ந்து விளையாட்டுப் போட்டியில் முதலிடத்தில் வந்து பள்ளியின் பெருமையைக் காப்பாற்றுகிறார்கள். இந்த இடம் உணர்ச்சிபூர்வமாக படமாக்கப் பட்டிருக்கிறது. நிற்க!


காதலும் அதனால் வரும் பொறாமையும் சூடு பிடிக்கிறது. எட்டுப் பேரில் ஒருவன் இன்னொருவனைப் பழி வாங்கும் நிலைக்குப் போகிறது. ஆனால் இடையில் ஒரு பாவமும் செய்யாத மூன்றாமவன் ஆண்டு நிறைவு விழாவின் போது நிறைவேற்றப் பட்ட சதித் திட்டத்தில் நண்பனை காப்பாற்றப் போய் இறந்து போகிறான். காதலித்தவனுக்கு காதலி எழுதி வைத்த கடிதம் மூலம் உண்மை உரைக்கிறது. பிறகு என்ன நடக்கிறது என்று திரையில் காண்க.


இயக்குனருக்கு கதை சொல்வதில் இருந்த சிக்கலைப் பற்றி படத்தின் நடுவே நாம் யோசிக்கிறோம். கிளைக் கதைகள் கதையோடு பொருந்த சற்றே சிரமப் படுகின்றன. கடைசிப் பாடலைத் தவிர மற்ற பாடல்கள் அவ்வளவாக கருத்தைக் கவரவில்லை. பாராட்ட வேண்டிய சமாச்சாரம் என்னவென்றால், 'டூயட்' பாடலைக் கூட பொறுப்புடன் விரசம் தட்டாமல் எடுத்திருக்கிறார்கள். பள்ளியின் நூறு வயதான மணிக்குக் கீழே அமைக்கப் பட்ட மேடையில் நடக்கும் மாணவர்களின் இசைக் கச்சேரி விறுவிறுப்பாகப் படமாக்கப் பட்டிருக்கிறது. எப்போதும் போல நதியா மிதமில்லாமல் சிறப்பாகச் செய்திருக்கிறார். அவர் நடிக்க வேண்டுமென்றால் சைக்கிள் ஒட்டிக்கொண்டே பாடும் காட்சி ஒன்றாவது வேண்டும் என்று ஒப்பந்தத்தில் எழுதி விடுவார் போலும்!


வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்கள் 'ஜோக்' பார்க்கும் மகிழ்ச்சிக்காகப் படம் பார்க்கலாம். ரொம்ப நாள் ஓடாது.


சத்யம் தியேட்டரில் இனிமேல் பாப்கார்ன் வாங்குவதில்லை என்று வைத்திருக்கிறேன். 'சவக் சவக்' என்று தரமிழந்து போய் கிடக்கிறது. அதை விற்று காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள்

Sunday, March 29, 2009

பங்குச் சந்தையில் பணம் பண்ணுவதா! போங்கப்பா!!

பங்குச் சந்தையில் சரியான சமயத்தில் பங்குகளை வாங்கி விற்கத் தெரிந்தவனுக்குத்தான் அதெல்லாம் முடியும். "ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி"யிருந்து கோட்டை விட்ட கதைகள் ஏராளம். பேராசையும் (Greed) திகிலும் (Fear) ஆட்டிப் படைக்கும் சந்தைக் களம் அது.

இது போன்ற (சராசரி?!) நினைப்புகளை உடைக்கும் வகையில் சமீபத்தில் ஒரு புத்தகம் படித்தேன். அது "மதிப்பு சராசரியாக்கும் முறை" (Value Averaging) என்ற புத்தகம். சல்லிசாக ரூ150 விலையில் ஹிக்கின்பாதம்ஸில் கண்ணில் பட்டது. மைக்கல் ஈ எட்லேசன் (Michel E Edleson) என்பவர் எழுதியிருக்கிறார். ISBN 81-7094-228-4. அவர் இந்தப் புத்தகத்தை அமெரிக்க பங்குச் சந்தையை மையமாக வைத்து எழுதியிருக்கிறார். மேலும் இவர் கூறும் முறையில் பங்குகளில் நேரடியாக வர்த்தகம் (Stock Trading) செய்யாமல் பரஸ்பர நிதிகளை (Mutual Fund) உபயோகிப்பதை அறிவுறுத்துகிறார்.

பங்குச் சந்தையில் காலையில் வாங்கி மாலையில் விற்கும் (ஏறக்குறைய சூதாட்டத்திற்கு ஈடான) தினப்படி வர்த்தக (Daily Trading) முறை கேள்விப் பட்டிருக்கிறோம். நிறுவனங்களின் செயல்பாட்டை ஆராய்ந்து அறிந்து நீண்ட கால முதலீடு செய்யும் அடிப்படை முதலீட்டு (Fundamental Investing) வகை கேள்விப்பட்டிருக்கிறோம். நண்பரோ அல்லது நட்பான தரகரோ துப்புக் கொடுக்க அதை வைத்து பங்கை வாங்கிப் போடுபவர்களைப் பார்த்திருக்கிறோம்.

நம் ஆசிரியர் இதெல்லாம் எதுவுமே தேவையில்லை (!?!) என்கிறார். திட்டமிட்ட முதலீட்டு (Systemmatic Investment) முறைகள் இரண்டை அறிமுகப் படுத்தும் இவர் கொள்கை விதிப் படி முதலீடு (ஃபார்முலா இன்வெஸ்டிங்) செய்ய, முறையே இரண்டு கொள்கை விதிகளை அறிமுகப் படுத்துகிறார்.

அந்த விதிகளில் ஒன்று பங்கு விலையைச் சராசரியாக்கும் (Cost Averaging) விதி. மற்றொன்று பங்கு மதிப்பைச் சராசரியாக்கும் (Value Averaging) விதி.

சுமார் 20 வருடங்களில் பங்குச் சந்தையின் செயல்பாட்டை ஆராய்ந்து அதன் மூலம் தனது விதிகளை ஆதாரத்துடன் நிலை நிறுத்தியிருக்கிறார். விதியை விதியால் (formula) வெல்லும் வழி சொல்லிக் கொடுத்திருக்கிறார்!

எளிமையாக எழுதப் பட்டிருக்கும் ஆர்வத்தைத் தூண்டும் புத்தகம் இது. விதியைப் புரிந்து கொண்டு தற்போது செயல் படுத்திக் கொண்டிருப்பதாலும், விதியை விவரிக்க ஒரு இடுகை போதாது என்ற காரணத்தாலும் அந்த விதியை பின் வரும் ஒரு இடுகையில் (அது இந்தியப் பங்குச் சந்தையிலும் வேலை செய்கிறது என்று எனக்குத் தோன்றினால்) காண்போம்.

Sunday, March 22, 2009

பொருளாதார நிலை பற்றி அருமையான விளக்கம்!

வீட்டுக் கடன்கள் மூழ்கியதால் பொருளாதாரம் எப்படிச் சீர்கெட்டது என்று படிப் படியாகத் தெளிவாக விளக்கும் சித்திரம் கீழே.

The Crisis of Credit Visualized from Jonathan Jarvis on Vimeo.

Friday, March 06, 2009

உலகம் உருண்டை (The World is Curved) புத்தக ஆய்வு


டேவிட் ஸ்மிக் என்ற புகழ் மிக்க பொருளாதார வல்லுனர் 'உலகம் உருண்டை' புத்தகத்தை எழுதியிருக்கிறார். இந்த ஆங்கிலப் புத்தகம் தாமஸ் ஃப்ரீட்மன் எழுதிய 'உலகம் தட்டை' (The World is Flat) என்ற புத்தகத்தைத் தொடர்ந்து எழுதப் பட்டிருக்கிறது. அதைத் தழுவி அல்ல. 'உலகம் தட்டை' உலகமயமாக்கல் பற்றியும் இணையத் தொழில் நுட்பம் தூரம் மற்றும் கலாச்சார வித்தியாசங்கள் ஏற்படுத்தும் தளைகளை உடைத்தெறிந்து செய்திருக்கும் அதிசயம் பற்றி பேசியது. 

டேவிட் ஸ்மிக் தன் புத்தகத்தில் உலகத்தில் நிதி (பணம்) ஆதாரங்கள் இணையத்தால் இணைக்கப் பட்டு ஒரு மாபெரும் கடலைப் போல் இன்று மாறியிருப்பதை எடுத்துக் காட்டுகிறார். இந்த ஆபத்தான மாக்கடலில்தான் இன்றைய அரசாங்கங்கள் தங்கள் பொருளாதாரங்களை வழி நடத்துகின்றன. 
நிதி ஓடைகள் எங்கிருந்து எங்கு பாய்கின்றன, எதனால் அப்படிப் பாய்கின்றன, எப்போது அவற்றின் திசைகள் திரும்புகின்றன என்று தெளிவாகப் புரிந்து கொள்ள உதவும் அமைப்புகள் இந்த நிதி மாக்கடலில் இன்னமும் ஏற்படுத்தப் படவில்லை. 

இந்த சிக்கல்களால் பெரும்பாலான நேரம் குருட்டுத்தனமாகவே பல அரசுகள் கொள்கை அமைத்துச் செயல் படுகின்றன. அதே போல ஒவ்வொரு நாட்டுக்கும் அவர்களின் மக்கட் தொகை விகிதங்களைப் பொறுத்து பொருளாதார வளர்ச்சித் தேவை அமைகிறது. உதாரணமாக சீனா தன் இளைஞர்கள் அனைவருக்கும் வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால் வருடத்திற்கு 10 சதவிகிதம் என்ற அளவில் அவர்கள் பொருளாதாரத்தை இன்னமும் பல வருடங்களுக்கு அவர்கள் வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. அதே நேரத்தில் ஐரோப்பியர்கள் தங்கள் பொருளாதாரத்திற்கு துரித கதியில் வளர்ச்சி தேவையில்லை என்று முடிவு செய்து விட்டார்கள் போலத் தெரிகிறது. 

மேற்கூறிய காரணங்கள் ஏற்படுத்தும் வெளிச்சமின்மையால் இன்றைய நிதிச் சந்தைகள் காற்றுப் போன போக்கில் அலைக்கழிக்கப் படுகின்றன என்று உண்மையைச் சொல்லி பயமுறுத்தியிருக்கிறார் ஆசிரியர். மாலுமியால் சரியான பாதையில் வழிநடத்தப் படாத கப்பல்கள் சூழலில் சிக்கி அழிந்து போவது போன்ற ஆபத்துகள் நிதிக் கடலில் பயணிக்கும் அரசாங்கங்ளைப் பற்றியுள்ளதை இவர் தெளிவு படுத்துகிறார்.

பொருளாதாரத்தில் ஈடுபாடும், யானைப் பொறுமையும் இருந்தால் மட்டுமே இந்தப் புத்தகத்தைப் படிக்க முடியும். பல கலைச் சொற்களையும் பொருளாதாரக் கோட்பாடுகளையும் அள்ளித் தெளித்து எழுதப் பட்டிருக்கும் புத்தகம் இது. உதாரணமாக அரசாங்கம் அல்லது மத்திய வங்கிகள் வட்டித்தொகையை மாற்றுவதால் ஏற்படும் பொருளாதார விளைவுகள் படிப்பவருக்குப் புரியும் என்ற நிலைப்பாட்டுடன் கருத்துகளை அல்லது முடிவுகளை அள்ளி வீசியிருக்கிறார் ஆசிரியர். என்னைப் போன்ற பாமரனுக்குப் புரிவது கடினமாகத்தான் இருந்தது. அதே சமயத்தில் பொறுமைக்கும், முயற்சிக்கும் பரிசு கண்டிப்பாகக் கிடைக்கிறது. 

உலக நிதி மாக்கடலில் உள்ள ஆபத்துகள் மற்றும் சூழல்கள் சிலவற்றை நான் இந்தப் புத்தகம் மூலம் புரிந்து கொண்டேன். உதாரணத்திற்குச் சுவாரசியமான சில கீழே:

  • இன்றைய 'சப் ப்ரைம்' பிரச்சினை கடலில் மூழ்கியிருக்கும் ஒரு மாபெரும் பனி மலையின் கண்ணுக்குத் தெரியும் உச்சியைப் போன்றது
  • முதலீட்டாளர்களில் 'பிரம்ம குரு' என்று உலகால் புகழ்ந்து போற்றப் படும் 'வாரன் பஃப்பெட்' நம் ஆசிரியர் கண்ணோட்டத்தில் தேவையில்லாமல் பீதியைக் கிளப்பி விடும் ஆசாமி (!?!)
  • அமெரிக்காவிற்கு 2 ட்ரில்லியன் டாலர் அளவிற்கு வெளிக் கடன் இருந்த போதிலும் அவர்களின் 57 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை ஒப்பிட்டால் இது கொசு. ஆகவே வெளிக் கடனால் அமெரிக்கா மூழ்கிப் போகப் போவதில்லை
  • அமெரிக்க டாலர் இன்னமும் உலகின் சேமிப்பு நாணயமாக இருக்கிறது. அதனாலேயே டாலரின் தேவை எப்போதும் இருப்பதாலும், சீனா போன்ற நாடுகள் தங்கள் சேமிப்பின் மதிப்பை சடுதியில் இழக்க அனுமதிக்க மாட்டார்கள் என்பதாலும் டாலர் அவ்வளவு சீக்கிரமாகச் சரியாது
  • அமெரிக்கா எண்ணை உற்பத்தி நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து அவர்கள் எண்ணை வாணிபத்தை டாலரில் நடத்த வேண்டும் என்று என்றோ போட்டுக் கொண்ட ஒப்பந்தம் இன்றும் உலக நாடுகள் (குறிப்பாக வளரும் நாடுகள்) எண்ணை வாங்க டாலருக்கு அலையும் நிலையை உருவாக்கி இருப்பதால் டாலருக்கு எப்போதும் தேவை அதிகமாகவே இருக்கிறது. தேவையின் அளவும் ஒரு நாணயத்தின் மேல் மக்கள் வைக்கும் நம்பிக்கையுமே நாணயத்தின் மதிப்பை நிர்ணயிக்கிறது. இரண்டாம் விஷயம் (நம்பிக்கை) குறைந்து கொண்டே வந்தாலும், அமெரிக்கர்க சூத்திரதாரிகள் தந்திரமாக டாலர் நாணயத் தேவையை அதிகரிக்கும் சூட்சுமங்களைச் ஏற்கெனவே செய்து வைத்திருக்கிறார்கள்.
  • ஈரான் போன்ற நாடுகள் எண்ணை வியாபாரம் செய்ய டாலர் கேட்கும் போக்கிலிருந்து மாற ஆரம்பித்து விட்டார்கள். இந்தப் போக்கு அமெரிக்காவிற்கு கவலைக்கிடம்
  • உலகின் ஒரே உற்பத்திக் கூடமாகப் போவதாகக் கனவுடன் இன்று சரக்குகளை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கும் சீனா தன் குமிழி உடைந்தால் இருப்பில் உள்ள சரக்குச் சேமிப்பை 'கிடைத்ததை அள்ளு' என்று காசாக்க முயற்சிக்கும் போது பல பொருளாதாரங்கள் உடைய வாய்ப்பிருக்கிறது
  • சீனாவில் இளைஞர்கள் இருக்கும் அளவிற்கு ஏகக் குறைந்த எண்ணிக்கையில் இளைஞிகள் உள்ளனர். அதே போல் இளைஞர்கள் அனைவருக்கும் கொடுக்க சீனாவில் வேலை இல்லை. வயசுப் பையன்கள் பெண்ணுக்கு அடித்துக் கொள்ளாமல் இருக்கவும் அவர்கள் வேலையில்லாத பிரச்சினையால் கலவரத்தில் இறங்காமல் இருக்கவுமே சீனா ஒரு மாபெரும் ராணுவத்தை நடத்தி வருகிறது. இந்த ராணுவம், அவர்களின் வளமான சில மாநகரங்களுக்கும் வளமில்லாத ஏகப்பட்ட கிராமப் புறங்களுக்கும் இடையே பெரும் செயற்கை அரணாகச் செயல் படுத்தப் படுகிறது.
  • கொடுத்த கடன் வராக் கடனாகப் போனால் இருக்கும் மொத்தக் கடன்களில் வராக் கடன் விகிதத்தைக் உடனே குறைக்க வேண்டுமல்லவா? இதற்கு என்ன வழி? இன்னமும் கொஞ்சம் கடனை உடனைக் கொடுத்து மொத்தக் கடன்களின் அளவை அதிகரித்து விட்டால் வராக் கடன் விகிதம் குறைந்து விடப் போகிறது! சிம்பிள்! இது சீனாவின் 'தனி' வழி!!
  • ஜப்பானிய அரசு சில வருடங்களுக்கு முன் வைப்புகளுக்கான வட்டியை 0 சதவிகிதமாகக் குறைத்தது. அப்போது ஜப்பானிய இல்லத்தரசிகள் அரிசிப் பானைக்குள் பணம் வைப்பதும், ஜப்பானிய வங்கியில் பணம் வைப்பது ஒன்றுதான் என்று புரிந்து போய் நேரடியாக வெளிநாடுகளில் இணையம் மூலம் முதலீடு செய்யத் தொடங்கி விட்டனர். அவர்கள் இன்று கட்டுப் படுத்தும் உலக நிதியின் அளவு சுமார் 11 ட்ரில்லியன் டாலர். தினசரி ஜப்பானிய நிதிச் சந்தைகள் திறந்திருக்கும் நேரத்தில் உலக நிதிப் பரிவர்த்தனைகளில் 20 விழுக்காடு ஜப்பானிய வீடுகளிலிருந்து தொடங்குகின்றன. இவற்றில் பெரும்பாலோர் இல்லத்தரசிகள். மீன் பொரியல் செய்து கொண்டே ஜப்பானியப் பெண்மணி சந்தைகளைக் கட்டுப் படுத்துகிறாள். முக்கால் வாசி நேரம் லட்சக் கணக்கில்  தனி நபர் முடிவுகள் மிகுந்த இந்த செயலமைப்பை எந்த ஒரு மத்திய வங்கியோ அல்லது அரசாங்க அமைப்போ இன்று கட்டுப் படுத்த இயலாது. இவர்கள் கட்டுப் படுத்தும் நிதி அளவோ சக்தி மிகுந்தது. இவர்களில் யார் எப்போது எந்தப் பக்கம் பாய்வார்கள் என்று எந்தக் கொம்பனாலும் கட்டியம் சொல்ல இயலாது

ஆர்வம் மிகுந்தவர்கள் மற்றவை புத்தகத்தில் காண்க.

Sunday, February 08, 2009

தி ப்ரெஸிடெண்ட் இஸ் கமிங் (2009)

இது ஒரு பாலிவுட் படம். ஜனவரியில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தை டாடா ஸ்கை 'ஷோ கேஸ்' இல் பார்க்கலாம். குனால் ராய் கபூர் என்பவர் இயக்கியிருக்கிறார்.

கதை இதுதான். அமெரிக்க (முன்னாள்) அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியா வருகிறார். அவர் ஒரு துடிப்பான இந்திய இளைஞரிடம் கைகுலுக்கிப் பேச வேண்டும். அதற்காக அமெரிக்கத் தூதரகத்தில் ஒரு விளம்பர நிறுவனத்தைப் பணிக்கிறார்கள். அந்த நிறுவனம் நாடு முழுவதும் சலித்து ஆறு இளைஞர்களைத் (நான்கு இளைஞர் மற்றும் இரண்டு இளைஞிகள்) தேர்வு செய்து தூதரகத்திற்குக் கொண்டு வருகிறார்கள். இளைஞர்கள் சிறு வயதிலேயே சாதித்தவர்கள். பங்குச் சந்தையில் கோடீஸ்வரர் ஒருவர், அழகு சாதனப் பொருள்கள் விற்கும் நிறுவனத் தலைவி, கம்ப்யூட்டர் துறையில் விற்பன்னன் என்று சாதனைப் பட்டியல் நீள்கிறது.

நாளை அதிபருடன் சந்திப்பு என்ற நிலையில் இந்த ஆறு பேரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க தூதரகத்திலேயே போட்டி நடத்துகிறார்கள் விளம்பர நிறுவனத்தைச் சேர்ந்த இரு பெண்கள். அவர்களிள் ஒருவருக்கு மட்டும் அதிபருடன் காலை உணவு உண்ண அழைப்பு கிடைத்திருக்கிறது. மற்றவருக்கு அது ஏகப் பொறாமையை கிளப்புகிறது. அத்துடன் அந்த மற்றவர் அகப்பட்டதைச் சுருட்டும் 'க்ளெப்டோமேனியாக்' பழக்கமுள்ளவர்.

விளம்பர நிறுவனப் பெண்கள் இரவோடிரவாக பல சுற்று திறமைப் போட்டி நடத்துகிறார்கள். லஞ்சம் கொடுத்து போட்டியில் தன்னை முன் நிறுத்திக் கொள்வது, பாலியல் குற்றம் சாட்டிப் போட்டியாளனை நீக்குவது, அறியாமையைப் பயன்படுத்தி இக்கட்டில் மாட்டி விடுவது என்று இந்திய இளைஞர்கள் இப்படித்தான் என்று வகை தொகை இல்லாமல் எப்படி வேண்டுமானாலும் போட்டியிடுகிறார்கள். வெற்றி ஒன்றே இலக்கு, அதை எப்படி வேண்டுமானாலும் அடையலாம் என்று முயற்சிக்கிறார்கள். தன்னலமும், போட்டியும், பொறாமையும் அவர்களை எப்படியெல்லாம் செலுத்துகின்றன என்பதைக் காட்டுகிறார்கள். திடீர் திருப்பமாக, வந்திருக்கும் ஒரு போட்டியாளர் தீவிரவாதி என்கிறார்கள். கடைசியில் யார் அதிபருடன் கை குலுக்குகிறார் என்பது உச்சக் காட்சி.

சுமார் 90 நிமிடம் படம் ஓடுகிறது. ஹிந்திப் படமா ஆங்கிலப் படமா என்று கூற முடியாமல் ஒரே மணிப்பிரவாளம். ஹிந்தி வசனங்களுக்கு திரையில் கீழே ஆங்கில எழுத்துப் போட்டதால் இதை ஆங்கிலப் படம் என்று வகைப் படுத்த வேண்டும். குறைந்த பட்சம் ஆறு வகைப் இந்தியப் பாணியில் ஆங்கிலம் பேசுகிறார்கள் இளைஞர்கள்.

நகைச்சுவை என்று எடுத்திருகிறார்கள். ஆனால் படம் முழுக்க அவல உணர்ச்சிதான் மேலோங்கியது. அடுத்து என்ன வரப் போகிறது என்ற குறுகுறுப்பை வளர்த்தாலும், காட்சிக்குக் காட்சி அவலம் அதிகரிப்பதால் படம் எப்போது முடியும் என்றுதான் இருந்தது.

ஒரு கதைதான் நினைவுக்கு வந்தது. இரு ஜாடிகளில் நிறைய நண்டுகள் இருக்கும், ஒன்றில் இந்திய நண்டுகள். மற்றொன்றில் வேற்று நாட்டு நண்டுகள். வேற்று நாட்டு நண்டுகள் இருந்த ஜாடி ஒரு மணி நேரத்திற்குப் பிறகு காலியாகி விடும். நண்டுகள் ஒன்றுக்கு ஒன்று உதவிக் கொண்டு அனைத்தையும் வெளியேற்றி விடும். இந்திய ஜாடியில் நண்டுகள் அப்படியே இருக்கும். உள்ளே பார்த்தால் ஏதாவது ஒரு நண்டு ஜாடியின் விளிம்புக்கு ஏற முயற்சிக்கும். மற்றவை உடனே அந்த நண்டை இழுத்துக் கீழே தள்ளி விடும்.

அவுட்சோர்ஸ்ட், ஸ்லம்டாக் வரிசையில் இந்தியக் குழப்பங்களைச் சொல்லும் இன்னொரு படம்.

Saturday, February 07, 2009

திறந்தவெளி வீதி வரைபடம் (OpenStreetMap)


விக்கீபீடியாவைப் போல் இது ஒரு திறந்தவெளி மென்பொருள் சேவை.

நம்ம ஊரில் வரைபடம் பார்த்து போகும் இடம் கண்டுபிடிப்பது வழக்கில் இல்லை. தெருமுனை டீக்கடையில் அல்லது ஆட்டோ ஸ்டாண்டில் அல்லது சிக்னலில் பக்கத்தில் நிற்கும் ஆட்டோ காரரிடம் கேட்டு 'பிடிச்சு பிக் அப் பண்ணி போய்க்கிட்டே' இருப்பவர்கள் நாம். ஆனால் சென்னை போன்ற மாபெரும் நகரங்களில் 'சுப்பு தெருவில் இருக்கும் ஹார்பர் மணி' வீட்டுக்கு வழி கேட்டால் அன்னாருக்குப் பக்கத்து வீட்டில் இருப்பவரே மேலும் கீழும் நம்மைப் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கும் நிலை வந்து விட்டது நித்திய உண்மை.

ஜிபிஎஸ் (GPS) தொழில் நுட்பம் மூலம் கைபேசியில் வரைபடம் கொண்டு வந்து விட்டார்கள். ஆனால் அவர்கள் கொடுக்கும் வரைபடம் அதரப் பழசு. சமகாலத் தெருக்களுக்கும் கைபேசி காட்டும் வரைபடத்திற்கும் சம்பந்தமே இருக்காது. அதைப் பார்ப்பவர் தவறை கைபேசி தயாரிப்பவர்களுக்குச் சுட்டிக் காட்டவும் வழி கிடையாது. கூப்பிட்டுச் சொன்னாலோ, மின்னஞ்சல் அனுப்பினாலோ மேலோட்டமாக இன்சொல் பேசிவிட்டு வெறுமே இருந்து விடுவார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு 'கூகிள் எர்த்' என்ற மென்பொருள் வெளிவந்தது. இந்த மென்பொருளை நாம் தரவிறக்கி நம் கணினியில் நிறுவி உபயோகிக்க வேண்டும். இந்த மென்பொருள் உதவியுடன் செயற்கைக் கோள் புகைப்படங்கள் மூலம் கட்டடங்களையும் தெருக்களையும் இனம் கண்டு பிடித்துப் பெயரிட முடியும். இந்தியாவின் மேல் எடுக்கப் பட்ட பல செயற்கை கோள் புகைப்படங்கள் மேல் மேகமூட்டம் தெரிந்ததால் பல இடங்களில் தரையில் இருப்பதை இனம் கண்டு பிடிக்க முடியாது. 'கூகிள் எர்த்' உபயோகித்து நாமே நம் பகுதி வரைபடத்தை தொகுத்துத் திருத்த முடியாது. கட்டடங்களுக்கும் தெருக்களுக்கும் பெயர் வைப்பதோடு சரி.

இன்றைய 'திறந்தவெளி வீதி வரைபடம்' அடுத்த கட்ட மென்பொருள் புதினம். மென்பொருளை தரவிறக்கத் தேவையில்லை. செயற்கைக் கோள் வரைபடங்கள் தெளிவாக உள்ளன (நான் பார்த்த வரை). நம்மால் செயற்கைக் கோள் பட உதவியுடன் கட்டடங்கள் மற்றும் சாலைகளின் எல்லைகளை மாற்றி எழுத (தொகுக்க) முடியும். தெளிவாக அறுதியிட முடியும். ஜீபிஎஸ் கருவி நம்மிடம் இருந்தால், நாம் சாலையில் பயணித்து பயணம் செய்த பாட்டையைக் கருவியில் பதிவு செய்து இந்த மென்பொருளில் சேர்ப்பதன் மூலமும் வரைபடத்தை மேலதிகத் துல்லியமாகத் திருத்த முடியும்.

பொதுமக்களால் பொதுமக்களுக்காக ஏற்படுத்தப் பட்டிருக்கும் இந்தச் சேவை எதிர்காலத்திற்கு மிகவும் உபயோகப் படும். அரசுக்குச் செலவில்லாமல், அவர்களின் சோம்பேறித்தனமான இடையூறும் இல்லாமல் நாமாக நம் சுற்றுப் புறச் சாலைகளை தெளிவாகவும் துல்லியமாகவும் ஒரு பொது வரைபடத்தில் பராமரிக்க இயலும். ஆனால் வரைபடத்தின் துல்லியத்திற்கு தனி ஒருவரைப் பொறுப்பாக்கி தவறுகளுக்கும், அவற்றின் காரணமாக ஏற்படும் குற்றங்களுக்கும் வழக்கு போட்டு உதைக்க முடியாத காரணத்தால் இத்தகைய வரைபடங்களை நம்பி நுகர்வதில் ஆபத்துகள் உள்ளன. ஒரு வரைபடத்தை எத்தனை போர் தொகுத்திருக்கிறார்கள் என்ற விபரம் தெரிந்து உபயோகித்தால் ஆபத்துகளை ஓரளவு தவிர்க்கலாம்.

சி கே பிரஹலாத் (New Age of Innovation) புத்தகத்தில் சொல்வது போல் அடுத்த சந்ததியினர் தொழில் நுட்ப உதவியுடன் அரசின் இடைப்பாட்டையே தூக்கி எறியும் நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். லஞ்சத்திற்கும், ஊழலுக்கும், மெத்தனப் போக்கிற்கும் பதில்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன என்று மனதில் தோன்றுகிறது.

Blog Archive