Sunday, June 28, 2009

பெய்யெனப் பெய்யும் மழை....

போன வாரமெல்லாம் இந்தியாவில் மழை தவறிப் போய் விட்டது. இப்படியே விட்டால் பஞ்சம், பட்டினி, விலைவாசி உயர்வு என்று நாடே கெட்டுப் போய் விடும் என்று கட்டியம் கூறி பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். நேரங் கெட்ட நேரத்தில் புயல் அடித்து பருவ மழையையே கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டது என்று அந்தப் புயலைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார்கள். சிலர் ஒரு படி மேலே போய் எங்கோ இருக்கும் 'எல் நீனோ' தான் இதற்கும் காரணம் என்றார்கள்

பருவமழை இரண்டு நாட்களாக முன்னேற ஆரம்பித்த உடன் பிரியாணி சாப்பிட்டு பீடா போட்டு விட்டு எல்லாரும் தூங்கப் போய் விட்டார்கள். வருடங்களும் ஒடிக் கொண்டுதான் இருக்கின்றன. பருவமழையும் அவ்வப் போது கண்ணாமூச்சி காட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

நம் நாட்டில் ஒருவன், தான் கல்லில் இடறிக் கொண்டு 'கல் தடுக்கி விட்டது' என்று சிறு வயதிலேயே சொல்லப் பழகுகிறான். முள்ளின் மேல் தான் காலை வைத்து விட்டு 'முள் குத்தி விட்டது' என்று குற்றம் சொல்கிறான். இப்படியே ஏதாவது இசகு பிசகாக நடக்கும் போது வெளி உலகின் மேல் பழியைப் போட்டு விட்டு நிம்மதியாக அடுத்த வேலையைப் பார்க்கும் மனப்பான்மை அல்லது கலாச்சாரம் வளர்ந்து கிடக்கிறது. கையாலாகாத்தனத்திலால் வளர்ந்த கலாச்சாரம் இது.

பருவ மழை ஏன் இப்படி பருவத்தில் பொய்க்கிறது. இயற்கையைக் குலைக்க நாம் செய்யும் நாச காரியங்கள் என்ன என்று யோசித்துத் திருத்திக் கொள்ளலாம். அல்லது மழை அதிகம் கிடைக்கும் போது கிடைக்கும் தண்ணீரைப் பாதுகாப்பது. உபரியாகக் கிடைக்கும் இடங்களில் இருந்து இல்லாத இடங்களுக்குக் கொண்டு செல்ல வழி வகுப்பது என்று காரியம் செய்யலாம். இதையெல்லாம் செய்ய வேண்டிய அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்குச் சலாம் போட்டுக் கொண்டிருக்கும் வரை நாம் கையாலாகத்தனத்தில் மேலும் கையைப் பிசைந்து கொண்டிருக்கலாம். அல்லது கிடைக்கும் முதல் வாய்ப்பில் பெட்டியைக் கட்டி நம் பிள்ளைகளை வெளி நாட்டில் குடியேற்றி விடலாம்.

என்னது?.... சின்ன வயசிலேயே குழந்தைக்கு சரியாக யோசிக்கக் கற்றுக் கொடுக்கலாமா? அப்படிச் செய்தாலாவது அடுத்த தலைமுறை இந்தியாவைப் பார்த்துக் கொள்ளுமா? வாரும் ! அப்படிச் செய்த நாடுகள் எல்லாம் உருப்பட்டு விட்டனவா என்று கொஞ்ச நேரம் பொழுது போக்காய் தர்க்கம் பண்ணி விட்டு நடக்கிற காரியத்தைப் பார்க்கப் போவோம்.

No comments:

Blog Archive