Friday, June 17, 2005

விரைவில் பறக்கவிருக்கும் இந்தியப் பணம்!

கடந்த நான்கு நாட்களில் மட்டும் எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த செய்திகளின் படி இந்திய விமானச் சேவை நிறுவனங்கள் எக்கச் சக்கமான விமானங்களை வாங்கித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

ஜெட் ஏர்வேய்ஸ், கிங்·பிஷர், ஏர் டெக்கான், இண்டிகோ இன்னும் கோயம்பத்தூரைச் சேர்ந்த ஒரு புதிய நிறுவனம் ஆகியவை இந்தப் பட்டியலில் அடங்கும்.

சில வாரங்களுக்கு முன்புதான் அரசு நிறுவனமான ஏர் இந்தியா விமானங்களுக்கான ஆர்டர்களை அள்ளித் தந்து கொண்டிருந்தது. பதிவு: விமானம் வாங்கலையோ விமானம். ஏர் சஹாரா நிறுவனம் அதன் பன்னாட்டு விமானச் சேவைக்காக விமானங்களை குத்தகைக்கு எடுக்கும் திட்டத்தை இன்று அறிவித்திருக்கிறது.

இந்திய விமானச் சேவை நிறுவனங்கள் மூன்று வகைக் காரணங்களுக்காக விமானங்கள் வாங்குகின்றன.

ஜெட், ஏர் சஹாரா, ஏர் இந்தியா போன்ற நிறுவனங்கள் தங்கள் அந்நிய நாட்டு சேவைக்கான நெடுந்தூரம் குறைந்த செலவில் பறக்கக் கூடிய விமானங்களை கையகப் படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

பட்ஜெட் விமான நிறுவனங்கள், மிகக் குறைந்த செலவில் உள்நாட்டுச் சேவைகளை இயக்கிப் புதியதொரு விமானப் பயண சந்தையை ஏற்படுத்தும் முயற்சிகளுக்குத் தேவையான விமானங்கள் வாங்கக் களமிறங்கியிருக்கிறார்கள். இதில் பட்ஜெட் விமான சேவைகளான கிங்·பிஷர், ஏர் டெக்கான் நிறுவனங்கள் புதிய பறவையான A380 ரக விமானங்களை வாங்கப் போவதாகத் தெரிகிறது. 800 சிக்கன இருக்கைகள் அமைக்கக் கூடிய இந்த விமானத்தை உபயோகித்தால் சென்னை - டில்லி விமான பயணத்திற்கான கட்டணதை ரூ 2500 க்குக் கீழ் குறைக்க முடியுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம். (பக்கச் செய்தி: A380 ரக விமானத்திற்கு உலக அளவில் ஏற்கெனவே 140 ஆர்டர்கள் குவிந்து விட்டனவாம். இதில் எமிரேட்ஸ் என்ற வளைகுடா நாடுகளைச் சேர்ந்த நிறுவனம் மட்டும் நாற்பத்திச் சொச்சம் விமானங்கள் ஆர்டர் செய்திருப்பதாகக் கேள்வி!)

மூன்றாம் ரகம்தான் இந்தியாவில் புதிய ரகம். பெருந்தனக் காரர்களுக்கும் (ரூ 4 கோடிக்கும் மேல் தனிப்பட்ட நிகர மதிப்புள்ள சொத்து வைத்திருப்போர்), மிகப் பெரிய வியாபாரக் கழகங்களுக்கும் விமான உரிமையைப் பகிர்ந்தளித்து அவர்களது விமானப் பயணத் தேவைகளை தனி விமானங்கள், விமானிகள் மூலம் அளிக்கும் உயர்வகைச் சேவை இது. வளர்ந்த நாடுகளில் மட்டுமே பார்க்கக் கூடிய இத்தகைய சேவைகள் இந்தியாவிற்குள் நுழைய ஆரம்பித்திருக்கின்றன.

27 பில்லியன் டாலர் அளவிற்கு விமான ஆர்டர்களை கடந்த இரண்டு வாரங்களில் மட்டுமே கொடுத்துக் குவித்துள்ள இந்தியாவின் மேல்தான் இன்று உலக விமான விற்பனை நிறுவனங்களின் கவனம் எல்லாம்.

காட்சியை மாற்றினால்:

ஒரே ஒரு எக்ஸ்-ரே சாதனத்தை வைத்துக் கொண்டு புறப்பாட்டு முனையத்தில் புறப்படும் பயணிகளை நீண்ட வரிசையில் காக்க வைப்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில் மத்திய மந்திரி ஒருவர் இதைப் பார்த்து கடிந்து கொண்டார் என்று செய்தி பார்த்தேன்

இந்தியாவிற்குள் நுழையும் அல்லது வெளியே செல்லும் பயணிகள் குடியேறல் மற்றும் குடிபுகலில் நிற்க வேண்டிய வரிசையின் நீளம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது.

சென்னை விமான நிலையத்தில் பயணத்தின் போது பதிவு செய்த கையுடைமைகளல்லாத மற்ற உடைமைகளைத் திரும்பப் பெறும் இடத்தில் நிலவும் குழப்பம் குறைந்தபாடில்லை. குடியேறல் மற்றும் குடிபுகல், சுங்கம், கன்வேயர் பட்டைச் சேவகர்களெல்லாம் முன்னை விட மிகக் கனிவாகவும், வேகமாகவும் வேலை செய்கிறார்கள். இருந்தும் இந்த நிலைமை...

அமெரிக்காவில் போக்குவரத்து மிகுந்த விமான நிலையங்களில் நடப்பது போல ஒடுதளத்தில் நுழைய வரிசையில் நிற்கும் விமானங்களை இன்று சில சமயம் சென்னையில் கூடக் காண முடியும்

என்னத்த விமானம் வாங்கி.... என்னத்த பறக்க விட்டு... போங்கப்பா.....

3 comments:

Badri Seshadri said...

விமானங்களை வாங்கிக் குவிக்கும் நிறுவனங்கள் அரசை நெருக்கி, விமான முனையங்களில் சேவையின் தரத்தை முன்னேற்றுவார்கள்.

அத்துடன் ஐரோப்பாவில் இருப்பது போல உள்நாட்டு விமான முனையங்கள் சிறு ஊர்களில் பெருகும். செங்கல்பட்டில் ஒரு முனையம், மும்பைக்கு அருகில் உள்ள சிற்றூரில் ஒரு முனையம் என்றால் குறைந்த விலை விமானச் சேவைகள் இந்த சின்ன விமான முனையங்களைப் பயன்படுத்துவார்கள். இந்த விமானச்சேவையைப் பயன்படுத்துவோரும் இரண்டு மணிநேரம் எக்ஸ்ட்ரா காலதாமதத்தைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்.

ந. உதயகுமார் said...

முற்போக்கான கருத்துகள் பத்ரி. நன்றி. இந்தியா அப்படி முன்னேறினால் நமக்கெல்லாம் மகிழ்ச்சிதானே!! நடக்கும் என்று நம்புவோம்...

Mookku Sundar said...

உதயா,

நல்ல பயனுள்ள பதிவு.

கலக்குங்க சார்...

Blog Archive