Monday, May 03, 2010

பொறாமை உணர்ச்சி

இந்தத் தலைப்பில் 'நீயா நானா' நிகழ்ச்சியில் வழக்கத்திற்கு மாறாக ஏறக்குறைய குடுமிப் பிடி சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். அதைக் கவனித்த போது எனக்குத் தோன்றிய சில கருத்துகள்.

பொறாமை என்பது தனக்கும் பிறருக்கும் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு நெகுதி (negative) உணர்வு. ஆதங்கம், வருத்தம், கவலை முதலிய உணர்வுகளுக்கும் பொறாமைக்கும் இடையே ஒரு மெல்லிய இடைவெளியே உள்ளது.

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சமூகத்தில் தன் அந்தஸ்து (status), தன் சுதந்திரம் (autonomy) , நெருங்கிய உறவுகள் (relatedness) , நியாயம் (fairness) , நிச்சயம்/பத்திரமாக (centainty) உணர்வது ஆகியவற்றைப் பெரிதும் மதிக்கிறார். இந்த உணர்வுகளுக்குப் பங்கம் வரும் காரியங்கள் தன்னைச் சுற்றி நடக்கும் போது மூளையில் அபாய மணி ஒலிக்கிறது. தற்காப்பைத் தூண்டும் விதத்தில் மனித மூளையில் இத்தகைய உணர்வுகள் கிளம்புவது இயற்கை. தன்னை மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போதே இத்தகைய தூண்டுதல்கள் கிளம்பும். தன்னைப் பார்த்துத் தானே பொறாமைப் படுபவர் யாரையும் நாம் பார்ப்பதில்லை.

மனிதன் ஆதி காலத்தில் இருந்து அபாய கட்டங்களில் தன்னைக் காத்துக் கொள்ள இரண்டு சூட்சுமங்களைத்தான் (strategy) உபயோகிக்கிறான். ஒன்று தப்பித்து ஒடுவது. மற்றொன்று எதிர்த்து நின்று சண்டை போடுவது. இரண்டு சூட்சுமங்களையும் செயல் படுத்த வேண்டிய உத்திகள் (tactics) சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். தனக்கும் அண்ணனைப் போல் உரிமைகள் வேண்டும் என்று வாதம் செய்யும் தங்கை எதிர்த்து நிற்கும் சூட்சுமத்தையும், எனக்கு செல்ஃபோன் பிடிக்காது அதனால் நான் அதை உபயோகிப்பதில்லை என்று போலியாக நியாயப் படுத்தும் ஏழைக் கல்லூரி மாணவன் சூழ்நிலையில் இருந்து தப்பிக்கும் சூட்சுமத்தையும் முறையே உபயோகிக்கிறார்கள்.

பண்படாத மனதுள்ளவர்கள் அபாயத் தூண்டுதல்கள் தன் மூளையில் கிளர்ச்சி கொள்ளும் போது யோசிக்காமல் இயல்பாக வரும் சூட்சுமத்தையும் அதன் உத்திகளையும் கடைப் பிடிக்கிறார்கள். குழந்தைகளின் இயல்பான நடத்தைகள் இதற்குப் பெரிய உதாரணம். இத்தகைய நடத்தைகள் முதிர்ந்தவையாகத் (mature) தெரிவதில்லை. சுற்றியிருப்பவர்களிடம் மேலும் நெகுதியான உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் அமைந்து விடுகின்றன. சில சமயம் இவை குடுமிப் பிடிச் சண்டையில் கொண்டு போய் விடக் கூடும். பண்பட்டவர்கள் யோசித்துச் சூட்சுமத்தையும் உத்திகளையும் கையாள எத்தனிப்பதால் அவர்கள் செய்கை முதிர்ச்சி உடையதாகத் தெரிகிறது. அவர்களைச் சுற்றி இருப்பவர்களும் பத்திரமாக உணர்கிறார்கள்.

No comments:

Blog Archive